Great service. Very thoughtful. —
Source::::YOU TUBE .& Input from a friend of mine
Natarajan


அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் புதையல் இருக்கும் இடத்தின் கதவைத் திறக்க அலிபாபா சொல்லும் வசனம் ‘திறந்திடு சீசேம்’ (Open Sesame). சீசேம் என்பது எள்ளுக்கான ஆங்கிலப் பெயர்.
உண்மையிலேயே எள்ளில் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்துகள் கணக்கற்றவை. அதை ஒரு பொக்கிஷ விதை என்றே சொல்லலாம்.
எள்ளில் மூன்று வகை உண்டு. கறுப்பு எள், எண்ணெய்ச்சத்து நிறைந்தது. சிவப்பு எள், இரும்புச் சத்து மிகுந்தது. தங்க அல்லது தந்த நிறம் கொண்ட எள், சமையலுக்கு உகந்தது.
அளவில் சிறிதாக இருந்தாலும், இந்த விதைகள் ஊட்டச்சத்து நிரம்பியவை. இதில் புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, அத்துடன் தாமிரம், இரும்பு, துத்தநாகம், மாலிப்டினம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துகளும் நிரம்பியுள்ளன.
ரத்த நாளங்கள், எலும்பு மூட்டு இணைப்புகள், எலும்பு போன்றவற்றை வலுப்படுத்தவும், அவை இழுவைத்தன்மையுடன் இருக்கவும் தாமிரம் உதவும். எலும்பு மூட்டு இணைப்புகள், எலும்புகளுக்குத் துத்தநாகமும் நல்லது. “எள்ளில் மெதியோனைன் (methionine), டிரைடோபன் (tryptophan) என்ற இரண்டு அமினோ அமிலங்கள் உள்ளன. மற்றச் சைவப் புரத உணவு வகைகள் எதிலும் இந்த இரண்டும் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் உணவு நிபுணரான ரெபேக்கா உட்ஸ்.
எள்ளில் எண்ணெய்ச் சத்து அதிகம். அதிக விளைச்சலையும் தரக்கூடியது. அரசர்களுக்கு மசாஜ் செய்வதற்கான எண்ணெயாக நல்லெண்ணெய் பயன்பட்டிருக்கிறது. அது மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.
ஆரோக்கிய ரீதியில் பார்த்தால், கல்லீரலுக்கும், சிறுநீரகத்துக்கும் எள் நல்லது. பொதுவான உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலை மேம்படுத்தும். சில ஆராய்ச்சிகளின்படி, குறிப்பிட்ட சில நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சையை எள் மேம்படுத்துகிறது. இது குறைந்த கிளைசிமிக் உணவும்கூட.
சுவை ரீதியில் பார்த்தால் வறுக்கப்பட்ட எள்ளை சாலட், சாஸ் போன்றவற்றில் தூவினால் அவற்றின் இனிப்புச் சுவை கூடும். இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உருளைக்கிழங்கு கறியிலும் இட்லியிலும் இதைப் பயன்படுத்தலாம். கொங்கணி மக்கள், எள்ளை வைத்துச் சுவையான சட்னியைச் செய்வது ரொம்ப பிரபலம்.
ஒரேயொரு பிரச்சினை, அதிக அளவு எண்ணெய்ச் சத்து இருப்பதால், எள்ளைச் சரியாக மூடி வைக்கவில்லை என்றால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். அதனால் காற்று புகாத கலனில் இதை அடைத்து வைக்க வேண்டும். குளிர்ச்சியான, ஒளி புகாத இடத்தில் சேமித்து வைத்தால், மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். சுமார் 6 மாதங்களுக்கு இதைச் சேமிக்க வேண்டுமென நினைத்தால், குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
தி இந்து (ஆங்கிலம்)
சுருக்கமான மொழிபெயர்ப்பு: வள்ளி
உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை.
கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது.
“இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு” என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.
“என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்களே. என் அப்பா பேரும் இதுதான், தாத்தா பேரும் இதுதான். 60 வருஷமா அய்யர் பொட்டலக் கடை என்கிற பேர்ல கடை நடத்திக்கிட்டுவர்றோம்.”
சுவையும் தரமும் தனித்தன்மையும் மிகுந்த இவர் கடையின் இனிப்பு, கார வகைகளுக்கு கலெக்டர், நீதிபதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், கலைஞர்கள் எல்லாம் வாடிக்கையாளராக இருப்பது இது வெறும் கடை மட்டுமல்ல, கிராமியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதையே உணர்த்துகிறது.
“எங்க கடையில பட்சணம் வாங்கிச் சாப்பிடுற குழந்தைக்கு எந்த விதமான வயிற்றுக் கோளாறும் வரக் கூடாது. கலப்படம் கிடையாது, தரம்தான் எங்க கடையின் ‘தாரக மந்திரம்’. ஆனாலும், அந்தக் காலத்து பட்சணத்தின் தினுசே வேற சார். இப்போ இருக்க விலைவாசியில தரத்தைக் காப்பாத்த படாதபாடு படவேண்டியிருக்கு” எனும் பொட்டலக் கடை அய்யருக்கு தற்போது 80 வயதாகிறது. தாடியும் மீசையுமாக ஒரு யோகிபோலக் காட்சிதருகிறார்.
“அந்தக் காலத்தில் பட்சணம் செஞ்சபோது ஒரு மூட்டை கடலைப் பருப்பு (அதாவது 64 படி) விலை ரூபாய் 56, ஒரு டின் கடலை எண்ணெய் (16 கிலோ) ரூபாய் 18, ஒரு வீசை பட்டாணி 13 அணா, ஒரு வீசை மந்தாரை இலை பத்தணா, ஒரு வீசை சக்கரை (1,400 கிராம்) 13 அணா” பழைய விலைவாசியை நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே போகிறார்.
பட்சணக் கடையின் உட்புறமுள்ள வீட்டுக்குள் அழைத்துக் காண்பித்தார். நீண்ட முற்றத்தின் ஒரு பகுதியைத் தடுத்து, அதிலே நட்டுவைத்திருக்கும் ருத்திராட்ச மரங்களைக் காண்பித்தார். 150 அடி வரை வளரக்கூடிய இம்மரங்களைத் தரிசிப்பது 100 கோயில்களை தரிசிப்பதற்கு இணையாகும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்.
வீடெங்கும் பட்சணத் தயாரிப்பின் நறுமணத்தோடு பக்தி மணமும் கமழ்கிறது. கூடம் ஏறக்குறைய ஒரு தியான மண்டபம்போல் இருக்கிறது. நூற்றுக் கணக்கான சாமி படங்கள், சிலைகள். எல்லாவற்றுக்கும் மாலைகள்.
பேச்சின் நடுவே டபரா டம்ளர்களில் காப்பி வந்தது. பிரமாதமான காப்பி. “எங்களுக்குப் பேராசை கிடையாது, ஸ்வாமி இவ்வளவு குடுத்திருக்கார் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக, திருப்தியாக இருக்கோம், இது போதும்”
-தூணில் சாய்ந்துகொண்டு மூக்குத்தி மினுங்க மாமி சொன்னார்.
அந்தத் திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் அந்தத் தம்பதியர் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
தஞ்சாவூர் கவிராயர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.
மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு
முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.
இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.
ஒரு போலி உருவாகிறது
மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.
அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.
அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.