“வேதத்துக்கு நிகரான மந்திரம் …”

வேதத்திற்கு நிகரான மந்திரம்

திருமூலர் திருமந்திரம்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.
எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.
பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.
இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.
இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.
நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.
ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.
சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.
சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.
சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.

Source:::: Input from a friend of mine

Natarajan

Message For the Day…” Know That YOU are the Spark of the Divine…”

Lord Krishna said, “Don’t conduct yourself like a beast, not even like a human being. Know that you are the spark of the Divine. You are ancient, eternal and essentially Divine. Mamaivamsho Jeeva Loke Jeeva Bhoota Sanatanaha.” Being the sparks of Divine, you must have the sacred qualities of Truth, Righteousness, Peace, Love and Nonviolence. Instead of behaving in accordance with these noble virtues, people submit themselves to evil qualities like lust, greed, anger, jealousy, hatred and avarice which does not befit a human being. These changes are due to one’s food habits and behavior. The food you take and the water you drink must be pure, and timely. Lead a well regulated human life and realise the Divine within you.

Sathya Sai Baba

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

Message For the Day…” In Every Step , Every Thing You See, God is Present… “

God is beyond all qualities. He is blemishless, steady and selfless (Nirmalam, Nischalam and Niswartham). He is beyond time and space. Don’t try to confine God to just one form. Install the principle that God is the Divine Soul (Atma) present within you and contemplate on Him. In every step, everything you see, God is present. God is the current that makes fans work; God is the mike that absorbs the sound, and the speakers that help others listen. If you put off the main switch, all the lights will go out. When you forget Divinity, you forget everything. Love God deeply, from within. Love God and you will be able to conquer the demons of bad qualities and also develop the society. Only a person with character can bring development in society. Only the one with love for God can lead a life of morality. Morality is truly a life principle. Without morality there is no community.

 

Sathya Sai Baba

” வெற்றிவேலை வணங்கினால் நாம் வாழ்வில் என்றும் வெற்றியே …”

ஜூன் 11 – வைகாசி விசாகம்

 

வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார். ‘வி’ என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு. ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின், இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப் பெற்றவர் முருகன். ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின் கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள் சிவனிடம் இதுபற்றி முறையிட, சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப் பொய்கையில் வளர்ந்து, குழந்தையானது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், அக்குழந்தையை சீராட்டி வளர்த்தனர். அவர்களிடம் வளர்ந்ததால், கார்த்திகேயன் என்று, போற்றப்பட்டார்.
முருகன், ஆறுமுகங்களும், 12 கரங்களும் கொண்டவர். ஒரு முகம், உயிர்களின் ஆணவ இருளை அகற்றி, ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது. இரண்டாவது முகம், தன்னை வழிபடும் அடியார்களுக்கு வரத்தை தருகிறது. மூன்றாம் முகம், அந்தணர்கள் செய்யும் யாகங்களை காவல் காக்கிறது. நான்காவது முகம், வாழ்க்கை என்றால் என்ன என்ற, மெய்ஞானத்தை உணர்த்துகிறது. ஐந்தாவது முகம், தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது. ஆறாவது முகம், வள்ளி நாயகியிடம் புன்முறுவல் பூக்கிறது.
அவரது, 12 கரங்களில், முதல் கை, தேவர் மற்றும் முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை, முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது. மூன்றாம் கை, உலகத்தை தன் கைக்குள் அடக்கி வைக்கும் அங்குசத்தை தாங்கியுள்ளது. நான்காம் கை, ஆசைகளைக் குறைக்கச் சொல்கிறது. ஐந்தாம் கை, நிறைந்த அருளைத் தருகிறது. ஆறாம் கை, வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது.
ஏழாம் கை, ‘சரவணபவ’ என்னும் சொல்லுக்குரிய பொருளை வெளிப்படுத்தும் வகையில், மார்பில் உள்ளது. எட்டாம் கை, மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது. ஒன்பது, பத்தாம் கைகள், யாக பலனை ஏற்கின்றன. 11ம் கை, மழையைத் தருகிறது. 12ம் கை, வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல; சிவாம்சமே முருகனாகத் திகழ்கிறது. அதுபோல் பார்வதி தேவியும் முருகனை விட்டு அகலுவதில்லை. முருகன் சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது, தாயிடம் ஆசி பெற்றார். பார்வதி தேவி தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, வேலாக தந்தாள். அதனால் தான், சக்திவேல் இல்லாமல், தனித்து முருகன் காட்சி தருவதில்லை. சக்திவேலுடன் கூடிய முருகனே, சூரனை வென்று, வெற்றி வாகை சூடினார். ஆக தாயும், தந்தையும் அவனே! ‘வேல்’ என்றால் வெற்றி. வெற்றி தரும் வேலை வணங்கினால், நம் வாழ்வில் என்றும் வெற்றியே!
வெற்றிவேல் முருகனின் பிறந்த நாளான வைகாசி விசாகத்தன்று, ‘முருகா வருக’ என, வரவேற்போம்; அவன் திருவடியைச் சரணடைவோம்.

Source:::: தி.செல்லப்பா  in Dinamalar , Vaara Malar

Natarajan

” அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி …. “

அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார். ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்சனம் பண்ண வந்தாள். மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடி செட்டில் ஆகிவிட்டாள். சின்னப்பெண் M A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. ஆனால், திடீரென்று ஒருநாள் அந்தப்பெண் ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள்.

வயசுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை சொல்ல ஆரம்பித்தனர். டாக்டர்கள் எக்கச்சக்க சோதனைகளுக்குப் பிறகு “வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் சரியாயிடும்” என்றனர்.

அம்மாவுக்கோ ஏகக் கவலை! கல்யாணம் பண்ணப்போற சமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா? பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள். ஆனால், வந்த அன்று சாயங்காலம் பெரியவாளை தர்சிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள். அந்தப் பெண்ணோ, கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.

மறுநாள் காலையில் மடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா. “பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…நல்ல குழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்படி ஆயிடுத்து….காப்பாத்துங்கோ! “….

பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் மடத்துக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணினார்கள். மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே,

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…” என்று உத்தரவிட்டார்.

பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும்,

“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..” என்று கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் ! அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!

வரிசையாக பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் மயக்கமடைந்தாள். அவளை அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் பெரியவா. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள் ! அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.

மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் இஷ்டம்” என்று இருந்துவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிஸுவைப் போல், நாம் நிஸ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது சத்யம்!

Source::::www.periva.proboards.com

Natarajan

” செந்தில் மேவிய சேவகன் …”

செந்தில் மேவிய சேவகன்

 

சேவகன் என்பதற்கு வீரன், பராக்ரமசாலி, தொண்டு புரிபவன் போன்ற பொருள்கள் உண்டு. யாருமே அண்ட முடியாத சூரபத்மனிடம் வீரபாகுவைத் தூதனுப்பிய வீரனாகிய செந்தில் ஆண்டவனை அருணகிரியார், ‘செந்தில் மேவிய சேவகன்’ என்று அழைக்கிறார். திருவாசகம், சிவபெருமானை, ‘குதிரைச் சேவகன்’ என்று அழைக்கிறது. சிலப்பதிகாரம் ராமபிரானை, ‘தொல்லிலங்கைக் கட்டழித்த சேவகன்’ என்று குறிப்பிடுகிறது. அநுபூதியில் ‘மயிலேறிய சேவகனே’, ‘திதிபுத்திரர் வீறடு சேவகனே’ என்றும் திருப்புகழில் ‘நீபச் சேவகனே’, ‘மயூரச் சேவகனே’, ‘திருச்செந்தூர் வரு சேவகனே’ என்றும் அருணகிரியார் பாடுகிறார். ‘சேவகன் வகுப்பு’ என்ற பெயரிலேயே தனி வகுப்பையும் பாடியுள்ளார்.

இந்த வீரத்தன்மை நம் முருகனுக்கு ‘பரம்பரைச் சொத்து’ என்கிறார் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளை அவர்கள். அருணகிரியாரின் பாடல்களிலேயே இதற்கான விளக்கம் கிடைக்கிறது. அவன் தந்தை யார்?
“உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர் கன கிரியை வளைத்தோர் புதல்வா!” [சேவகன் வகுப்பு]
அவனது தாயார் பெருமை என்ன?
“கூற்று மரித்திடவே உதை பார்வதி”
“கூற்றினை மோதிய பத சத்தினி காலாந்தகி” [திருப்புகழ்]
[அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில், சிவனது இடப்புறம் பார்வதி இருப்பதால் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவர் எங்கள் பார்வதி என்பார்கள் சாக்தர்கள்.]
முருகனது மாமன் எப்படிப்பட்டவர்?
“ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா!” [சேவகன் வகுப்பு]
சேவகன் வகுப்பு பாடலில்
“வளைகடல் கதற, நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச் சேவகனே!”
என்று கூறுகிறார். ஏன் முருகனை ‘முழுச் சேவகன்’ என்கிறார்?
வளை கடல் – கன்ம மலம்
நிசிசரர் – ஆணவ மலம்
மலை (கிரௌஞ்சம்)- மாயா மலம்
இம் மும்மலங்களையும் ஒருசேர அழித்த செந்திலாண்டவனை ‘முழுச் சேவகன்’ என்றழைப்பதில் மிகையேதுமில்லையே!

“கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய்! ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!
-கந்தர் அலங்காரம்.
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்குமே! செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.”
-தனிப்பாடல்.

சேவகன் வகுப்பு
இருபிறை எயிறு- இரண்டு பிறைத் திங்கள் போன்ற பற்களினின்றும்
நிலவு எழ: மிக்க ஒளி உண்டாக
உடலம்: உடம்பானது
இருள்படு சொருபம் உடை கோ- இருண்ட நிறத் தோற்றம் உடைய யமன்
[சிவ லோகத்தின் சட்ட புத்தகமான, விதிவிலக்குகளைக் கற்பிக்கும் வேதநெறியை மீறி நடந்தவர்களைத் தண்டிக்கும் உத்தமமான பெரிய நீதிபதியாதலின் யமன் உடம்பை உடம்பென்னாது சொருபம் என்கிறார்.]
விடவே- கட்டளையிட்டு அனுப்ப
இறுகிய கயிறுபட- முறுக்கேறிய பாசத்தில் [சுவாசத்தில் கட்டியிழுக்கும் சூக்ஷ்ம கயிறு] உயிர்கள் அகப்பட
வினை முடுகி- உள்ள தம் தொழிலில் விரைந்து
எமபடர்- வந்த யம தூதர்கள்
பிடரி பிடித்தே- பிடரியில் கை வைத்து பிடித்தபடியே
கொடு போய்- கொண்டு சென்று
அருமறை முறையின் முறை முறை கருதி- அருமையான வேதம் உரைத்த விதியின்படி, முறையே தவறு படாமல் உன்னைச் சிந்தித்து
அதர் இடை- யமனிடம் கொண்டு போய் நிறுத்துவதற்குமுன் இடைவழியிலேயே
ஒறுத்தால் வகையால்- பல வகையாகத் தண்டித்தால்
அறிவொடு மதுர மொழியது குழறி- அறிவும் இனிய சொல்லும் தடுமாறி
அலமறு பொழுதில் அழைத்தால் வருவாய்- கலங்குகின்ற அக்காலத்தில் முருகா என்று அழைப்பேனாதலால் அவ்வமயம் உடனே வந்து அருள் புரிவாயாக.
ஒருபது சிரமும் இருபது கரமும் விழ- (இராவணனது) பத்துத் தலைகளும் இருபது கரங்களும் அற்று விழும்படி
ஒருபகழி தொடுத்தோன் மருகா- ஒப்பற்ற பிரம்மாஸ்திரத்தை செலுத்திய (ராம பிரானாக அவதரித்த) திருமாலின் மருகனே!
உரமது பெரிய திரிபுரம் எரிய- வன்மை மிக்க முப்புரங்களும் எரிந்து சாம்பலாக
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா- உயர்ந்த பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபிரானுடைய புதல்வனே!
மருவளர் அடவி வனிதையர் பரவ- இயற்கை மணம் பெருகும் வனத்திலுள்ள அழகான வேட்டுவ மகளிர் வழிபட (அவர்தம் வழிபாட்டை ஏற்று)
மரகத இதணில் இருப்பாள் கணவா- வள்ளியார்க்கு வேடர்கள் அமைத்த பசுமையான பரண் மேல் தினை காத்த கண்ணும் கருத்துமாய் இடத்தைவிட்டு அகலாது இருக்கும் வள்ளியின் நாயகனே!
(குறவர் இளவஞ்சி மருவும் அழகா)
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே!- உலகை வளைத்திருக்கின்ற கடலானது கதறி முறையிடவும், அசுரர் மடியவும், மலையுடன் போரிட்ட முழு வீரனே!

சித்ரா மூர்த்தி
சென்னை.

source::::Murugan Bhakthi

Natarajan

 

 

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

“ஓரிக்கையில் இருக்கும் பெரியவா பாதுகை …”

ஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம்! பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்?”

“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா? இதை பெரியவாட்ட குடுக்கறதுக்கு….”

“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் ?…”

“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”

” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்?..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

“பர்மிஷனா!…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே! அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே!..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”

“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா?…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே! ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ?…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்!

வேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது! “சித்த இருங்கோ பட்! அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை. சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான்! அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது! அவருக்கும் மெதுவாகவே பேச வராது!

இதோ! சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது! இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.

“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.

“இதானா விஷயம்! குடுங்கோ…மாமா அந்த பாதுகைகளை!” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார். கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை! உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.

அவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி! இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம்! உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் !!

இரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.

ராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க!

மஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அபிஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.

Jaya Jaya Sankara Hara Hara Sankara.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::www.periva.proboards.com

natarajan