Self Improvement
வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “
வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !
பார்த்து , கேட்டு , ரசித்து நெகிழ்ந்தது …”அஸ்திவாரம் அழகாக தெரிவதில்லை”
Source…FaceBook input
Natarajan
படித்து ரசித்தது …” குட்டி பறவைக்கு வந்த தைரியம்!”
கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.
தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.
குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.
அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.
ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?
வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.
ம.சுசித்ரா in http://www.tamil.thehindu.com
Natarajan
வாரம் ஒரு கவிதை…” செல்லாக் காசு ” !!!
படித்து நெகிழ்ந்தது …” பாசத்தின் வாசனை “
நவம்பர் 8, 2016
இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!
நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.
நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்… ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.
இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.
பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.
மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்…” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.
என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல… இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு…” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.
பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ…” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.
ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே… இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.
அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!
(
ஜி.ஆர். சுரேந்தர்நாத்
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Natarajan
வாரம் ஒரு கவிதை …”வழி தவறிய பயணங்கள் ” !!!
“வழி தவறிய பயணங்கள்”
வாரம் ஒரு கவிதை …” பட்டதாரி ” !!!
வாரம் ஒரு கவிதை… ” பட்டாசு சத்தம் ” !