படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

” அச்சம் என்பது மடமையடா …”

Dr .Karthikeyan in The Hindu….Tamil….

புணேவில் உள்ள அந்த வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அங்கு என் தமிழ் நண்பர் மனித வளத்துறை தலைவராக இருக்கிறார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு மட்டும் நூறு பொறியாளர்களை வேலைக்கு எடுத்து பராமரித்து வருவதாகச் சொன்னார்.

அந்த புனித பசுக்கள்தான் நிறுவனத்தின் எதிர்காலம் என்றும் அவர்களை நிறுவனம் எப்படியெல்லாம் போஷிக்கிறது என்றும் விளக்கினார். அந்த கம்பெனியின் தாயகம் ஜெர்மனி என்பதால் அடிக்கடி அங்கு செல்லும் வாய்ப்பையும் அடுத்த நூற்றண்டின் தொழில் நுட்பத்தை உருவாக்கும் அற்புத வாய்ப்பையும் இவர்கள் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் சொன்னார்.

தமிழ்நாட்டிலிருந்து எத்தனை மாணவர்களை எடுத்தீர்கள் என்று கேட்டேன். வடக்கில் படித்த தமிழ் மாணவர்கள்தான் தன்னிடம் இருப்பதாகவும், தமிழ் நாட்டுக் கல்லூரிகளிலிருந்து எடுக்க முடியவில்லை என்றும் சொன்னார். ஏன்? அயல் நாட்டினர் பங்கு கொள்ளும் கடைசி கட்ட நேர்காணலில் ஆங்கில அறிவும் தன்னம்பிக்கையும் குறைவாக உள்ளதாக சொல்லி தமிழ் மாணவர்கள் வடிகட்டப்படுவதாகச் சொன்னார். “எல்லாம் தெரிஞ்சும் நம்ம பசங்க தைரியமா வாயை திறந்து ‘இது எனக்குத் தெரியும்’னு பளிச்சுனு சொல்ல மாட்டாங்க!” என்றார்.

வடக்கே உள்ளவர்கள் தெற்கிலிருந்து வருபவர்களை வாயில்லா பூச்சி போல பார்ப்பது நிஜம். அதை நிரூபிக்கும் விதமாக நம் மக்கள் பம்முவதும் நிஜம்தான்!

“தேசிய நீரோட்டத்தில் வடக்கும் மேற்கும் ஆதிக்கம் செய்கின்றன. தெற்கும் கிழக்கும் அடங்கிப் போகின்றன” என்று நண்பர் சொன்னதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.

தாழ்வு மனப்பான்மை

சேத்தன் பகத் எழுத்துகளும், ஷாருக்கான் படங்களும், மும்பை கம்பெனிகளின் விளம்பரங்களும் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதற்கு சாட்சி. நாம் வாயை திறக்க முடியாததற்கு ஹிந்தி தெரியாதது மட்டும் காரணம் இல்லை. தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் பெரும் காரணம். தமிழ் தெரியாவிட்டாலும் இங்கு வந்து பிழைப்பவர்களுக்கு இருக்கும் திமிரும் தினவும் நமக்கு இல்லை.

எல்லா காலங்களிலும் படித்து விட்டு வேலைக்கு ஏங்கி நிற்கும் கூட்டமாகத்தான் சுதந்திர இந்தியாவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் வெள்ளைச்சட்டைக்குரிய பணிகளோ அல்லது அடித்தள வேலைகளோ அதிகம் பார்த்ததினால் நம்மை ஒரு பொருட்டாக அவர்கள் மதித்ததில்லை. அரசியல், சினிமா, வியாபாரம் என எல்லா துறைகளிலும் நம் அறிவு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு நடக்கவில்லை.

அதேபோல எங்கும் தமிழர் தன்னையும் தன் இனத்தையும் நிலை நிறுத்துவதற்கான வேலையைச் செய்யவில்லை.

வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு

போர்க் குணம் எல்லாம் புற நானூற்று காலத்துடன் போய் விட்டது. கடைசியாக தமிழன் தானாக சென்று ரத்தம் சிந்தியது ஹிந்தி எதிர்ப்பிற்காக 1965ல். பிறகு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக வரலாறு மறந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறான். இங்கு பணி செய்ய, வியாபாரம் செய்ய என சகலத்திற்கும் வெளி மாநிலத்தினர் வந்தாயிற்று. உள்ளுக்குள்ளேயே விலை போகாத தமிழன் வெளியே போய் வேலை பார்ப்பது எவ்வளவு கடினம்?

பேசியதில் கசப்புதான் மண்டியது. நாம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். “எது படிச்சாலும் நல்லா தைரியமா பேசணும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கற தைரியம் வேணும். நிறைய வெளியே வரணும்” என்றெல்லாம் எழுதுங்க என்றார் நண்பர். இதோ எழுதிவிட்டேன்!

வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தேன்.

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” என வீர முழக்கம் ஒவ்வொரு கல்லூரியிலும் முழங்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் படித்தபின் ஒரு அயல் நாட்டு மொழியும் ஹிந்தியும் கட்டாயமாக கற்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வெளி மாநில அனுபவம் அவசியம். குறைந்தது ஒரு வார கல்விச் சுற்றுலாவாவது கூட்டிச் செல்ல வேண்டும். பல கல்லூரிகளில் இது நடப்பதே இல்லை.

விடுமுறை காலத்தில் வெளி மாநிலத்தில் கட்டாயமாக ஒரு பிராஜக்ட் செய்ய வேண்டும் என்று கல்லூரிகள் மாணவர்களை பணிக்க வேண்டும். மாற்று கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அதே நேரம் நம் கலாச்சாரத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் தன்னம்பிக்கை தளர்வதை தவிர்க்க இயலாது.

நம் மாணவர்களின் வேலைத்தகுதிக் குறைவு என குறைபடுபவர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

அதேபோல வெளி மாநில, வெளி நாட்டு தமிழ் சங்கங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் நின்று விடாமல் நம் தமிழ் மாணவர்கள் பிற கலாசாரங்களில் வேரூன்ற உதவ வேண்டும். இந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளை நடத்தலாம். அந்த காலத்தில் கோயில் உள்ள ஊர்களில் தன் இன மக்களுக்காக சத்திரம் கட்டி வைத்தார்கள். வரும் விருந்தாளிகளுக்கு உணவு உபசரிப்பு மட்டுமின்றி ஒரு கலாசார பரிவர்த்தனைக்கும் அது வழி செய்யும். அதுபோல இந்த தமிழ் சங்கங்கள் இயங்க ஒரு விரிவான செயல் திட்டமே தீட்டலாம்.

`மினி ஆந்திரா’

மதராஸ் ஐ.ஐ.டி க்குள் ஒரு மினி ஆந்திராவே உண்டு. பல ஐ.டி. கம்பெனிகளில் நிர்வாகம், மனித வளம் போன்ற பிரிவுகளில் கேரள ஆதிக்கம் உண்டு. பல வட நாட்டுத் தலைவர்கள் கொண்ட தென்னாட்டு நிறுவனங்களில் இங்குள்ள பணியாளர்களுக்கு ஹிந்தி வகுப்பு நடக்கிறது. அதுபோல பல நிறுவனங்களில் தமிழ் நாட்டு பணியாளர்கள் (கீழ் நிலைகளில் மட்டுமல்ல!) வேண்டாம் என வெளி மாநிலத்தினரை நாடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவை எல்லாம் இயல்பாக நடைபெற்றவை அல்ல.

உள்ளுக்குள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வெளியே போகவும் அச்சப்பட்டு நிலை குலைந்து நிற்கிறான் தமிழன். கடாரம் கொண்டான் என்று பெருமையோடு பேசப்பட்ட இனம் இன்று காட்பாடியை தாண்டுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது!

gemba.karthikeyan@gmail.com

Keywords: மனித வளம், கார்த்திகேயன், தமிழர்கள், தமிழ் மொழி, மொழி வளம், தாழ்வு மனப்பான்மை, வேலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு
Topics: வணிகம்|

source:::: Dr. Karthikeyan in The Hindu …TAMIL

Natarajan

” முடிந்ததா உங்க பிரச்சனை … ” ?

 

வெடித்தது  ஒரு  குண்டு  ….  மடிந்தது  ஒரு இளந்தளிர்  …

இடி  விழுந்தது  ஒரு  குடும்பத்தில் …. சோகத்தில்

முடிந்தது  அவர்தம்   கனவு … சொல்லுங்க  இப்போ …

கொடிய வர்களே …. முடிந்ததா  உங்க  பிரச்சனை

விடியலை  பார்க்காமல்  மடிந்த அந்த   இளம் தளிருடன்  ?

 

நடராஜன்

 

 

 

 

 

 

” தமிழில்தான் பேசணும் …தமிழ் பேச்சை மறக்க கூடாது …”

 



நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை – அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் – எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. “பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.

அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, ‘யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்’ என்று சொன்னர்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks – என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.

பெரியவா சொன்னார்கள்” “ஒரு request நான் சொன்ன கேட்பேளா?”

ஒரே குரலில், “Oh yes! certainly we will do” என்று குழந்தைகள் கூறின.

‘வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா – அம்மா, சுவமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது.”

குழந்தைகள். ‘இனிமே அப்பா – அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!’ என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்! 

source:::: http://www.periva.proboards.com

natarajan

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan

 

 

சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!!

 

 

குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.

முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.

நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.

கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

source:::: The Hindu….Tamil

natarajan

 

 

” இலங்கை அழிந்ததேன் ?… இரவி மறைந்ததேன்? …” !!!

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்…
அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா – நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
ஒரு நாள் காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் சுற்றுப் புறச் சூழல் மறந்து!
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல் விளையாட்டு எங்களுக்கும் அத்துபடிதான். எல்லாம் நம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்துப் பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?”
இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”!
அதெப்படி…? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!”
பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்து வருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்…
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
– உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கிறது இந்த வாசகம்!

செங்கோட்டை ஸ்ரீராம் – in Dinamani…blog.dinamani.com

natarajan

பேர் ஆசை ….பேராசை !!!

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும்.
வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை.
அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது.
அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார்.
அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்..

kural
பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும்
பொய்யெனக் கருதப் படும்.

 

 
நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது.
இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்….
சிரித்தபடியே என்னிடம் கேட்டார்…
“1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல்.
“திருவள்ளுவர்” என்றேன்.
“அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….”
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது.
எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

செங்கோட்டை ஸ்ரீராம் in Dinamani ….Blog.dinamani.com

natarajan

]பிள்ளையார் , முருகன் இருவருமே தமிழ் தெய்வங்கள்தான் …!!!

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறாரர். அவரைப் “பிள்ளையார்’ என்றே அன்போது கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறும் “பிள்ளையார்’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை “நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனÙமுஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு – ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே – அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் – அந்த அண்ணா – தம்பிகளைப் பிரிக்கவேபடாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் – பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன் கொண்டு வரப் போகிறேன்! (அது) “பாஸ்’ ஆகணுமே! அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

source:::: KALKI…Tamil Weekly
natarajan

சித்திரை முதல் நாள் ….

ed17a-securedownload

சித்திரை  முதல் நாள் … தமிழ்  புத்தாண்டு பிறப்பின் முத்திரை பதிக்கும்  நன்னாள்

நித்திரை நீங்கி  முக்கனி  நாம் பார்க்கும் இனிய  நாள்  இந்த  நாள் …

விஷேட  வருடம்  விஜய  வருடம் ….நலம் பல  கொடுத்த  நல்ல  வருடம்

நன்றியுடன்  விடை கொடுப்போம்  ,  நாம் அதற்கு ….இனிதே

வரும்  ஜெய வருடமதை  இரு கரம் கூப்பி  வரவேற்ப்போம்  நாம்

அருமையான  ஒரு  வருடமாக  அது அமையட்டும்  நமக்கு

பெருமையும்   புகழும்  சேர்க்கட்டும்  நம்  நாட்டுக்கு …இறைவன்

அருள்  கிட்டட்டும்  தொடர்ந்து  நமக்கு   !!!

 

நடராஜன்