
பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி
நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில்
கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை
ஏற்றிருந்தார்.
பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த
மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து
பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்”
என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில்
ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே
நுழைந்தார்கள்.
கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை
நடந்து வந்தது.
“இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது”
என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே
திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி
ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’
என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக்
காண்பித்தார்.
“இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை
அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள்.
ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
“செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும்
இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித்
தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள்.
ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
“சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை
கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள்.
தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம்.
ஆனால் சொல்லத் தெரியவில்லை.
“மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும்
சத்தத்தைக் கவனி” என்றார்கள்.
“கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச்
செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி.
“மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.
அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப்
பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி-
மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி
கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும்
வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும்.
அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று
சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி
நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான்
அடிப்பாகமாகக் கொள்வார்கள்.
“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக
உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய்.
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான்
தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள்.
ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின்
காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான்
எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று
பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள்
பெரியவர்கள்.
எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில்
சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம்
நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற
முடிவுக்கு வருவார்கள்.
தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?
Read more: http://periva.proboards.com/thread/8986/#ixzz3WbYK3Z4e
source……. http://www.periva.proboards.com
Natarajan
தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை.
கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.
அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி ‘விர்..விர்’ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.
இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் “எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?” எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும்.
வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்… எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்… ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்… பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், “விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்…. இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி” எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.
தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!
ஈரோடு கதிர் – எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/
Source…….. http://www.tamil.thehindu.com
Natarajan