படித்ததில் பிடித்தது… சிரிப்பொலி !!!

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.

‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.

சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.

மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.

‘சே….இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.

இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என்னங்க…. சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”

“மழை வேற… கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”

“அதாங்க…. வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”

“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”

“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல….”

“இல்ல… நீ போன் போடவே இல்ல… நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”

“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ… எதுக்கும்… நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”

“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.

“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்.”

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.

Keywords: கதை, நகைச்சுவை, சிரிப்பொலி, ரிலாக்ஸ்
Topics: சமூகம்|

 

source::::: THE HINDU…TAMIL

Natarajan

” மேலும் பல மாரி ஸ்தலங்கள் உருவாக வேண்டும் …”

’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.

இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்

 

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.   

 

 

இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.

இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.

மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ்.

Keywords: நீர் ஆதாரங்கள், பியூஷ் மானுஷ், தூர் வாரும் பணி, நீர் நிலைகள், நீர் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, ஏரிகள்
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்| பொது|

source:::: THE HINDU…TAMIL

NATARAJAN

படித்ததில் பிடித்தது …. என்றும் எப்போதும் என் கந்தன் …

படித்ததில் பிடித்தது……

திருமுருக கிருபானந்த வாரியார்

(1) காலை எழுந்தவுடன்

காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ
[‘மாலை தனில்’- திருப்புகழ்]

(2) வழிபாடு தொடங்கும்போது

உம்பர்கள் ஸ்வாமி நமோ நம
எம்பெருமானே நமோ நம
ஒண்டொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே
[‘கொம்பனையார்’- திருப்புகழ்]

(3) வெளியே புறப்படும்போது

சேய அன்பு உந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்தில்சேய!
வன்பு உந்து இகல் நிசாசராந்தக! சேந்த! என்னில்
சேயவன், புந்தி, பனிப்பானு, வெள்ளி, செங்கதிரோன்,
சேயவன், புந்தி தடுமாறவே தரும் சேதமின்றே.
“வள்ளி மணாளனே! அசுரர் குலாந்தகனே! சேந்தனே! என்று துதிப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் வக்ரோதயங்களால் ஆகும் தீமையில்லை.”- [கந்தர் அந்தாதி]

(4) ஒரு செயலைத் தொடங்கும் போது

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல் கொடு பொடித் தூளதா எறி
நினைத்த காரியம் அனுக்கூலமே புரி பெருமாளே
[‘விலைக்கு மேனி’- திருப்புகழ்]

(5) உண்ணும் போது

“அகில புவனாதி யெங்கும்
வெளியுற மெய்ஞ்ஞான இன்ப
அமுதை யொழியாதருந்த அருள்வாயே”
[‘சுருளளக’- திருப்புகழ்]

(6) மாலை கடவுளுக்குத் தீபம் ஏற்றும் போது

“மோகாந்தகாரம் தீர்க்க
வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே”
[‘நாகாங்க’- திருப்புகழ்]

“தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய்”
[‘நாத விந்து’- திருப்புகழ்]

(7) நோய்கள் நீங்க

“தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்
விழிவலி வறட்சூலை காயா சுவாசம் வெகு
சலமிகு விஷப்பாக மாயா விகார பிணி அணுகாதே”
[‘தலைவலி’- திருப்புகழ்]

(8) இடர்கள் நீங்க

“அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து
அலைவாயுகந்த பெருமாளே.”
[‘விறல் மாரன்’- திருப்புகழ்]
தகவல் சித்ரா மூர்த்தி.  in MURUGAN  BHAKTHI
[கிருபானந்த வாரியார் எழுதிய ‘குமரனும் கோசலை குமரனும்’ எனும் புத்தகத்திலிருந்து]

நன்றியுடன் :::: நடராஜன்

படித்ததில் பிடித்தது …” உனக்கு என்ன படிக்க ஆசை … ” ?

பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,

வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

என் பிள்ளைக்கு இந்த கோர்ஸ் செட் ஆகுமா?, எதுக்கு வேலைவாய்ப்பு அதிகம்?, கேம்பஸ் இன்டர்வியூக்கள் எந்தக் கல்லூரியில் அதிகம் நடக்கிறது?, இந்த கோர்ஸுக்கு எந்தக் கல்லூரியில் படிப்பது நல்லது? இப்படி பல கேள்விகள் பெற்றோரின் மன ஓட்டத்தில் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மேலே கூறிய எல்லா கேள்விகளும் கேட்கப்பட வேண்டியவையே, ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி ஒன்று நம் நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை.

“உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?” – வாழ்வை அமைக்கும் கேள்வி அது.

உடை பிடிக்கிறதா, உணவு பிடிக்கிறதா என்ற கேள்விகளை தன் பிள்ளைகளிடம் கேட்கின்ற பெற்றோர்கள் ஏன் ‘நீ என்னவாக விரும்புற, உன் ஆசை என்ன?’ என்று கேட்பதில்லை.

பிள்ளைகளின் ஆசை என்னவென்றே அறியாமல் முடிவெடுப்பது ஒரு பிழை என்றால், ‘தம் பிள்ளைக்கு இது படிக்கத் தான் ஆசை, தம் பிள்ளைக்கு இப்பிரிவில் நிறைய திறமைகள் இருக்கிறது, இவனுக்கு இதை படிக்க வேண்டும் என்று விருப்பம்’ இப்படி பிள்ளைகளின் கனவை உணர்ந்தும் பெற்றோர் முரண்பட்ட முடிவை எடுப்பதினை பேதமை என்றே உரைக்கலாம்.

பிடிக்காத ஒரு படிப்பினை நாம் படிக்கும்போது மனதினில் வெறுப்பு தான் ஆட்கொள்கிறது. அப்போது கல்வியும் வெறும் மதிப்பெண்ணை பெற்று வேலையைப் பெறுவதற்கான ஒரு மாற்றுப் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்காத படிப்பினை எடுத்து அப்பிரிவிலே வேலைப் பார்க்கப் போகும்பொழுது பார்க்கின்ற வேலையில் பற்றற்று போகின்றது. கடைசி வரை பல பேரின் வாழ்க்கை ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற முறையினாலேயே நகர்த்தப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் இப்படி வாழ்க்கையை புளிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாக இருப்பது பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நாம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.

குழந்தை எடுத்து வைக்கின்ற முதல் அடி போல் ஒரு கல்லூரி, மற்றும் எடுக்கப்படுகின்ற பிரிவு ஆகியவை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரு மீனவனின் மகன் எரோனாடிகல் படிக்க வேண்டுமா? அப்படிப் படித்தால் என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? அதற்கு மாறாக கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாமே என்று எண்ணினால் நமக்கு அப்துல் கலாம் எப்படிக் கிடைத்திருப்பார்?

கல்வியின் அடிப்படைத் தேவையை பொருளாதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிதற்றலானது. இன்று நாம் அனைவரும் வாழக் காரணமாக இருப்பது விவசாயம். ஆனால் விவசாயத்தை பற்றி படிப்பதாக ஒரு மாணவன் கூறினால் சிரிக்கிறார்கள். நம் தேசத்தின் அடையாளமே விவசாயம்தான் என்பதை அறியாதவரின் அறியாமைச் சிரிப்பு இது.

ஒரு பெண் மெக்கானிக்கல், சிவில் படிக்க ஆசைப்படுகிறேன் என்றால் ஏளனமாக சிரிக்கின்றார்கள். கல்பனா சாவ்லாக்களை அறியாதவர்களின் அறியாமைச் சிரிப்பு அது.

மேலும், மீடியா தொடர்பாகப் படிக்கப் போகிறேன், கலைப் பிரிவில் படிக்கவிருக்கிறேன், நர்சிங் படிக்க விழைகிறேன், தமிழ் படிக்க விரும்புகிறேன் என ஒரு மாணவர் கூறினால் அவர் மனக்கோட்டையை சிதைப்பதில் இச்சமுதாயத்திற்கு பெறும் பங்கு இருக்கிறது.

‘என் மகன் இந்த காலேஜ்’ல இந்த கோர்ஸ் படிச்சு இப்ப சந்தோஷமாக இருக்கிறான் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்? உங்க மகனையும் அதுவே எடுத்து படிக்கச் சொல்லுங்க’ இப்படி எதாவது கூறி பெற்றோரின் மனக் குட்டையில் கல்லை எறியும் கூட்டத்தின் தவறான அறிவுரையால் இன்று பல பிள்ளைகளின் வாழ்வியல் பாதிப்படைகிறது, இன்னும் அடைந்து கொண்டே இருக்கிறது.

கல்வியின் அவசியத்தை பாராமல் ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இதைப் போன்ற கமர்ஷியல் கணவான்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள கூடாது.

உண்மையில் எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வருங்காலத்தை பற்றிய தெளிவான எண்ண ஓட்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்ளலாம், தவறே இல்லை. அப்படி எடுத்துக் கொண்ட பாதையில் தன் திறமையை உணர்ந்து சாதித்தவர்கள் பலர்.

எனக்கு இது தான் ஆசை, இது தான் விருப்பம், இதில் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற மன உறுதி கொண்டவர்கள் கண்டிப்பாக தன் வேட்கையை பெற்றோர்களிடம் உரைத்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்?

விருப்பமில்லாத படிப்பை படித்து நீங்கள் உங்கள் வாழ்வை மட்டும் சிதைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பு படிக்க தீவிரமாக முயற்சித்த மற்றொரு மாணவனின் கனவையும் சேர்த்து சிதைக்கின்றீர்கள். நான் இது தான் படிக்கப் போகிறேன் என் ஆசை இது என்பதை கேட்பவர்களிடம் ஆணித்தரமாக சொல்லுங்கள் அப்படிச் சொல்கையில் உங்களுள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட பாதையில் வெற்றி பெறுவதற்கான வேட்கை கூடும்.

நான்கு வருடம் முடித்துவிட்டு நான் இன்ஜினியரிங் படித்திருக்கக் கூடாது என்றுணரும் பொறியியலாளர்களும், ஆறரை வருடம் கழித்து மருத்துவம் படித்திருக்கக் கூடாது என்றுணரும் மருத்தவர்களும் நம் ஊரில் ஏராளம். படிக்கையில் இனிமேல் எனக்கு இது ஒத்துவராது என்று பாதி வழியிலே விலகிக் கொண்டவர்களும் ஏராளம்.

தன் காதலை இழந்துவிட்டோம் என்று மேசையில் தலை சாய்த்து அழுபவர்கள், பேருந்தில் ஜன்னலிலே சாய்ந்து கொண்டு விழி நீர் இறைப்பவர், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன் கையாலாகத் தனத்தை உணர்ந்து தனிமையில் அழுபவர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

தன் பிள்ளை விழுந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வுணர்ச்சியே அவர் பிள்ளைகளின் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடக் கூடாது. யாரோ மூன்றாவது நபர் கூறும் பேச்சிற்கு மதிப்பளிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆசைக்கும் கொஞ்சம் மதிப்பளியுங்கள். அப்படியே அவர்கள் எடுத்துக் கொண்ட பாதையில் விழுந்தால் கூட வீழமாட்டார்கள் எழுந்து கொள்வர் ஏனென்றால் இது அவர்கள் எடுத்த முடிவு என்ற அச்சமும், கடமையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

பசி இழந்து, உறக்கம் இழந்து, சுகவாசத்தை இழந்து, பொழுது போக்கினை இழந்து நாளும் பிள்ளைக்காகவே வாழ்ந்து தேயும் பெற்றோர்களே… உங்களின் ஆசை எல்லாம் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தானே! அப்படி இருக்கையில் ஒரு முறை உங்கள் பிள்ளைகளின் ஆசையை கேளுங்கள். கண்டிப்பாக எந்த பிரிவு எடுத்தாலும் அதில் காதல் இருந்தால் சாதிக்கலாம்; சாதித்தவர்களும் பலர். உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் பிரிவில் சாதித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா படிப்பிற்கும் அவசியம் உண்டு, எல்லோர் வாழவும் வழியுண்டு. என்ன, கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே.

ஆயிரத்து நூற்றிக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் ஆர்ட்ஸ் படிக்கக் கூடாதா என்ன? ஆயிரத்து நூறு மதிப்பெண் மேல் எடுத்து பிடிக்காத பிரிவில் படித்து சரிந்தவர்களும் இருக்கின்றனர், அறுநூறு மதிப்பெண் எடுத்து வாழ்வில் சாதித்தவர்களும் பலர் உள்ளனர். பெயர் பெற்ற கல்லூரியில் பிடிக்காத பிரிவை எடுத்துப் படிப்பதை விட சுமாரான கல்லூரியில் பிடித்த படிப்பை படிப்பதே மேலானது.

ஒரு சிறிய விண்ணப்பம்.. மதிப்பெண் வெளிவந்துவிட்ட நிலையில், “அய்யய்யோ.. இயற்பியல்ல பத்து மார்க் குறைஞ்சிடுச்சி, வேதியல்ல இரண்டு மார்க் போச்சு…”

இந்தக் கவலையை எல்லாம் விடுங்கள். உங்கள் பிள்ளை என்ன மதிப்பெண் எடுத்திருந்தாலும், அது அவரின் உழைப்பு. அந்த உழைப்பிற்கு மதிப்பளித்து தேர்வு முடிவு வரும் வரை காத்திருங்கள். நன்கொடை கொடுத்து படிக்கப்படும் படிப்பு அறிவை வளர்ப்பதை விட அச்சத்தைத்தான் வளர்க்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற உங்கள் அன்பு புரிகிறது. அப்படியே உங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் எதிர்காலத்திற்கு ‘முடிவாக’ இல்லாமல் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்தப் புலம்பல்கள், பெற்றோர்கள் பலருக்கும் ‘மொக்கை’ கடிதமாகத் தெரியலாம். ஆனால், சில பல ஆண்டுகளுக்கு முன்பு கிரியேட்டிவ் ஃபீல்டில் நுழைவதற்காக ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்த ஒரு பிளஸ் 2 மாணவன், நிர்பந்தத்தின் காரணமாக வேறு படிப்பு படித்து, இப்போது ஓர் ஐ.டி. நிறுவனத்தில் போதுமான ஊதியத்துடன் வெறுமையான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறான். வெளியுலகுக்கு பந்தாவானவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் நொந்தவனாகவும் இருக்கும் இந்த நிலை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் வேண்டுமா?

ஹரி – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com ….. in The Hindu … Tamil

natarajan

Keywords: பிளஸ் 2 தேர்வுகள், எதிர்கால கனவுகள், மேற்படிப்புகள், பிளஸ் 2-விற்கு பிறகு, உயர்கல்வி
Topics: உயர் கல்வி| வழிகாட்டுதல்| கல்வி| உயர் கல்வி|

முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்….

 

 வள்ளி தெய்வானை சமேத முருகன்

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவர்கள் மும்மூர்த்திகளை வணங்கினாலும் இயற்கை வழிபாடுகளை கைவிடவில்லை. மனித குல மேம்பாட்டிற்கு அத்யாவசயம் என்பதினால் காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வாயு போன்ற ஐந்தையும் புனிதமாகப் போற்றி வணங்கி வந்தார்கள்.

அது போலவே மரங்களும் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சில மரங்களை ஸ்தல விருட்ஷங்கள், அதாவது ஆலயத்து புனித மரங்கள் என அவற்றை மக்கள் தற்போது வணங்கி வந்தாலும், பண்டையகால மனிதர்களும் மரங்களை இயற்கை வழிபாடு என்ற பெயரில் வணங்கி வந்துள்ளார்கள்.

பிறந்தது முதலே முருகனும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளார். சிவனுடைய மூன்றாம் கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாக வெளி வந்தவரை வாயுவே (வாயு பகவான்) எடுத்துச் சென்று சரவணப் பொய்கை எனும் நதியில் இருந்த ஆறு தாமரை மலர்கள் மீது ஆறுமுகமாக வைத்தார்.

முருகப் பெருமான் தன்னுடைய பிறப்பில் இருந்தே இயற்கையின் ஐந்து புலன்களுடன் சம்மந்தப்பட்டு இருந்துள்ளார். சங்க இலக்கியங்களில் அவரை செடி கொடிகளும் மரங்களும் அடர்ந்த குறிஞ்சி மலையின் அதிபதி என்று கூறி உள்ளார்கள்.

பண்டையக் காலம் முதல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் ஆலயங்களை எழுப்புவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள். தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனைக் கொல்லச் சென்ற போது அவன் ஒரு மாம்பழ மரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நின்று கொள்ள, அதை கண்ட முருகனும் ஒரு அம்பை எய்து அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து விட ஒன்று அவருடைய மயில் வாகனமாகவும், இரண்டாவது அவருடைய சேவல் கொடியாகவும் மாறியது.

ஆகவே சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறும்போது இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக அங்கு மாம்பழ மரத்தைப் போல ஒன்றை வைப்பது வழக்கம்.

காலம் செல்லச் செல்ல பக்தர்கள் முருகனுக்கு ஆலயங்களை அமைக்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருந்த ஸ்தல விருட்ஷங்களையும் வணங்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட ஒரே மரம் தல விருட்ஷமாக இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

உள்ளூர் நிலைக்கேற்ப முருகன் ஆலயங்களில் இருந்த தல விருட்ஷங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் உள்ள மரங்களின் வரலாற்று மகத்துவத்தையும், மருத்துவ குணங்களை ஆராய்வதுமே ஆகும்.

அவற்றைக் குறித்த புராணக் கதைகளையும் ஆராய்ந்தேன். இதில் ஸ்தல புராணங்கள், படித்தப் புத்தகங்களின் சாரம், மற்றும் அந்தந்த ஆலயங்களுக்கு விஜயம் செய்த போது அங்கு கேட்டறிந்த செய்திகள் போன்ற அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முருகனுடைய ஆலயம் பல இடங்களிலும் இருந்தாலும், வெவ்வேறு தல விருட்ஷங்களைக் அடங்கிய ஆலயங்களையே ஆராய்ந்தேன்.

தாமரை மலர்கள் மற்றும் மாம்பழ மரங்களைத் தவிர இந்தக் கட்டுரையில் காணப்படும் மரங்கள் வருமாறு: ராணி மலர் அல்லது மருதம் (Terminalia Arjuna), பன்னீர் அல்லது இந்திய கற்பூரவல்லி (Guettarda speciosa), புன்னை (Calophyllum inophyllum ), நெல்லி (Emblica officinalis), மகிழம் (Mimusops elengi), பலா (Artocarpus integrifolia), குரா (Webra corymbosa), பத்ரி ( Stereospermum suaveolens), வன்னி (Prosopis spicigera) மற்றும் கல் அதி (Ficus retusa auct) போன்றவை அவை.

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை தண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் ‘மருதமரம்’. அதை சமஸ்கிருதத்தில் ‘அர்ஜுனா’ என்கிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மருத மரங்கள் அதிகமாக உள்ளதினால் அந்த ஆலயத்தின் பெயரும் அதனால் வந்திருக்கலாம். இந்த மரத்தில் சிறிய சிறிய பூக்களே பூக்கின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷத்தை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்த மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள பட்டைகளை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவத்தில் இருதய நோய்க்கு மருந்தை தயாரிக்கின்றார்கள்.

‘வாகதத்தா’ மற்றும் ‘சக்ரதத்தா’ போன்ற பெரும் மருத்துவ நிபுணர்கள் இருதய சிகிச்சைக்கான வேறு பல மருந்துகளுடன் இந்த மரத்தில் இருந்து செய்த மருந்தையும் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதில் செய்யப்படும் மருந்துகள் ஆஸ்துமா நோய்க்கு நல்ல மருந்தாகும். இதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடைந்து போன எலும்புகள் இணையும்போது அவை வலுப்படும். வயிற்று நோயான பேதியை நிறுத்த மருதப் பொடியை உண்ணலாம்.

இளம் பெண்களின் முகங்களில் தோன்றும் சிறு பருக்களுக்கு இந்த மரப்பட்டையின் பசையைத் தடவலாம். தேள் கடிக்கு இந்த மரத்தின் பட்டையை எரித்து அதன் சாம்பலை தடவினால் உடனே குணமாகும். இயற்கையில் நுண்ணுயிரிகளால் விளைவும் தீமைகளை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் சக்தி கொண்டது இந்த மரம்.

திருச்செந்தூரில் உள்ள முருகனின் ஆலயத்தில் பூஜை செய்த வீபுதியை பன்னீர் இலை மீது வைத்தே பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் பன்னீர் மரம் அங்கு முருகப் பெருமானுக்கு உகந்த மரம் ஆகும். இந்த மரத்தின் வெள்ளை நிறப் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. சில ஆலயங்களில் பன்னீர் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது.

இரவில் பூத்துக் குலுக்கும் இந்தப் பூவின் வாசனை நல்ல நறுமணத்தைக் கொண்டு உள்ளது. இந்த மரத்தின் பூக்களை அர்ச்சனை செய்யவும், மாலையாகக் கோர்த்து தெய்வங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் பட்டைகள் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளது. இந்த மரப்பட்டையை வயிற்று நோயான பேதியை நிறுத்தும் மருந்துகள் செய்யவும், வீடுகளில் மேஜை நாற்காலிகளை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் தோல் பகுதிகளில் உப்பிக் கொள்ளும் இடங்களில் இந்த மரத்தின் இலைகளை வைத்துக் கட்ட உப்புசம் குறையுமாம்.

புன்னை மலர்கள் சாதாரணமாக சிவபெருமானின் காலை வேளை பூஜையில் போடப்படும் மலராகும். புன்னை மரம் கடலூரில் மைலம் எனும் இடத்தில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ஸ்தல விருஷம் ஆகும். இது வாழ்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் மரமாம்.

புராணங்களில் ‘புன்னக வனம்’ என்று கூறி இந்த மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன. பண்டைய காலத்தில் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்ததாம். பூக்க வேண்டிய காலத்தில் இந்த மரத்தில் பூக்கள் தோன்றவில்லை என்றால் ஊர் பெண்கள் அந்த மரத்தை சுற்றி நின்றவாறு நடனம் ஆடிக்கொண்டே அதை எட்டி எட்டி உதைப்பார்களாம்.

அப்படி செய்வதின் மூலம் பூக்காத மரங்களும் பூக்கத் துவங்கும் என்பது ஆச்சர்யமான உண்மையாக இருந்துள்ளது (Agrawala, Ancient Indian Folk Cults, 1970, Varanasi). புன்னை மலரின் சாற்றைப் பூசுவத்தின் மூலம் மேக நோயும் (venerial disease), உடலில் தோன்றும் கொப்புளங்களும் குணமாகுமாம்.

புன்னை மர இலைகளை பொடி செய்து உபயோகித்தால் தலை சுற்றலும், தலை வலியும் குணமாகும். நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியும் (நடுக்கம்) இதன் மூலம் குணமாகிறது. இந்த மரத்தின் அடிமரப் பட்டையின் சாற்றை உட்கொண்டால் உடலுக்குள் மற்றும் வெளியில் வெளியேறும் ரத்தம் கெட்டிப்பட்டு நின்று விடும்.

இந்த மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை ஊசி மூலம் தசையில் செலுத்திக் கொண்டால் தொழு நோயினால் ஏற்படும் வலியை குறைக்க முடியும் என்பது ஆச்சர்யமான செய்தியாக உள்ளது (Dustur, J. F., Medicinal Plants of India and Pakistan, 1962, Bombay).

இந்த மரத்தின் விதையில் இருந்து பெறப்படும் பச்சை வண்ண எண்ணை நாற்றம் அடித்தாலும், தசை வலி, மூட்டு வலி, தோல் வியாதி மற்றும் சீழ்ப்புண் (அல்சர்) போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது. (Cowen, D. V., Flowering Trees and Shrubs in India, 1984, Bombay). இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் கட்டி அதாவது சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். (Krishnamurthy, T, Minor Forest Products of India, 1993, Delhi). புன்னை பழங்களில் இருந்து பசை கிடைக்கின்றது.

மகிழ மரம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்த மலர்கள் என்பதினால் வைஷ்ணவர்களும், சைவர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தவிர ஜைன மற்றும் புத்த மதத்தினரும் அதை பயன்படுத்துகிறார்கள். மகிழ மரங்கள் அமராவதி மற்றும் சாஞ்சி ஸ்தூபிகளுக்கு அருகிலும் உள்ளன.

‘நெமினத’ எனும் ஜெயின் தீர்த்தங்கரர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மோட்ஷம் அடைந்தாராம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், மதுரை மாவட்டத்தில் பூம்பாறையில் உள்ள குழந்தைவேல் ஆலயம் போன்றவற்றில் இந்த மரம் ஆலய ஸ்தல விருட்ஷமாகும். இந்த மரத்தின் மலர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்ட பூக்கள் ஆகும். அவை வாடினாலும் மணக்கும்.

இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் நிறையவே உள்ளன. இந்த மரத்தின் அடியில் இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு உணவு அருந்தனாலும், அதன் மீது எச்சில் துப்பினாலும் அந்த மரம் அதிக பூக்களை பூக்குமாம் (M. Amirthalingam,Sacred Trees of Tamil Nadu, Chennai, 1998, p 167). இந்தியப் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை பெறுவது வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அப்படி ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள், ஆலயங்களில் உள்ள இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு தொட்டிலைக் கட்டி விட்டால் ஆண் குழந்தைப் பிறக்குமாம்.

அது போல தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு கயிற்றைக் கட்டுவார்களாம். கோரிக்கை நிறைவேறியதும் ஆலயத்துக்குச் சென்று அங்கு கட்டி இருந்தக் கயிற்றை அவிழ்த்து விடுவார்களாம். முருகனை சியோன் என கருதுவதினால் (son of Korravai & Siva) குழந்தை வரம் கேட்டு அவரை வணங்குவார்களாம்.

குரா எனப்படும் சுரைக்காய் போன்ற மரம் தந்தைக்கும் மகனுக்கும் உகந்த மரமாம் (Siva and Murugan). நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள திருவிடைக்காய் எனும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷமாம் இந்த மரம்.

இந்த மரத்தை ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். காஞ்சீபுரத்தில் ஜைன காசி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்திலும் இதுவே ஸ்தல விருட்ஷம் ஆகும். இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு செய்தியின்படி ‘ தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்யனாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது’ (South Indian Inscriptions Vol. VII, No. 399).

ஸ்தல புராணத்தின்படி நல்ல மணம் கொண்ட இந்த மரத்தின் பூக்களை முருகன் பெரிதும் விரும்புகிறார். இந்த மரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டிவிட்டு, ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம்.

இந்த மரம் திருவிடைக்காளி ஆலயத்தில் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பொந்தில் உள்ள உள்ள நாகத்தை அங்குள்ள பண்டிதர் தினமும் பூஜித்து வருகிறார் . இந்த ஆலயத்தை சுற்றி உள்ளப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் யாருமே இதுவரை பாம்புக் கடிபட்டு இறந்தது இல்லையாம்.

கல் அதி அல்லது குறுகலான இலைகளைக் கொண்ட நாவல் மரமும் திருப்பரம்குன்றத்து சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகனுக்கு உகந்தப் புனிதமான மரமாம். திருப்பரம்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். சிறு மலைக் குன்றின் மீது உள்ள இங்குதான் சூரபத்மனைக் கொன்றப் பின் முருகப் பெருமான் வந்து தேவசேனாவை மணந்து கொண்டார்.

சங்க காலத்தை சேர்ந்த சிறப்பான பத்து காப்பியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் இயற்கையாகவே அழகாக அமைந்து உள்ள இந்த இடத்தின் பெருமையை விவரித்து உள்ளார். இந்த மரப்பட்டையின் சாறு வயிற்றுப் புண் மற்றும் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்துமாம்.

பலா, வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற மூன்றுப் பழங்களிலும் பலா முக்கியப் பங்கை வகிக்கின்றது. சேலம் மாவட்டத்தின் கொல்லிமலை ஆறுமுகப் பெருமான் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் பலா மரமாகும்.

பலா மரத்தின் இலைகள் வாழை இலையைப் போன்ற புனிதமான இலை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் கலசம் வைக்கும் பெண்கள் வாழை இலைகளை வைப்பது போல பலா இலைகளைக் கூட உபயோகின்றார்கள். பண்டைக் காலத்தை சேர்ந்த சில புத்த மத சிலைகளில் கூட பலா மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்த மரத்தின் அடியில் கடவுட்கள், அகமாக்கள், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அமர்ந்து இருந்ததான செய்தியைக் குறிப்பிட்டு அதன் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டி உள்ளார்கள் (M. Amirthalingam). இந்த மரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றினாலும் அது தெய்வங்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்த பலனைத் தருமாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டை முருகன் ஆலயத்தில் உள்ள முத்துக் குமரன் ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் பத்ரி மரமாகும். இதன் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. இந்த மரத்தின் பூக்கள் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்தவை.

அது மட்டும் அல்ல இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டுதான் பதினோராவது தீர்தங்கரான வசுபூஜ்யா என்பவர் ஞானம் அடைந்தாராம். அவர்களைத் தவிர ஒரு யக்ஷாவும் இந்த மரத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது (Bhattacharya, Jaina Iconography, Delhi, 1974). திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த மரமே ஸ்தல விருட்ஷமாகும்.

இத மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருந்துதான் பார்வதி தேவி தனது பாபங்களை விலக்கிக் கொண்டாராம். (Sthala Purana of Padaleeswarar temple). பண்டைய இந்திய மருத்துவ மேதைகளான ‘சரகா’, ‘சுஸ்ருதா’ மற்றும் ‘வராஹமித்ரா’ என்பவர்கள் இந்த மரத்தில் பல்வேறு பகுதிகளை பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தின் பட்டைகள் இருமல், வயிற்று வலி மற்றும் ரத்தசோகை போன்ற வியாதிகளை குணப்படுத்துமாம். இதன் பூக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும். இந்த மரத்தின் வேர் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டு சிவன் ஆலயங்கள் பலவற்றில் வன்னி மரமே ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதே வன்னி மரம் திருச்சி மாவட்டத்தின் குமாரவயலூர் ஆலயத்தில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் புனிதத்தைப் பற்றி ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன.

அக்னி பகவான் இந்த மரத்தில் வாசம் செய்ததான கதை உள்ளது. ஆகவே யாகங்களில் எழுப்பப்படும் ஹோமங்களில் இது விசேஷமானதாக கருதப்படுகிறது. தீ மூட்டி வளர்க்கப்படும் ஹோமங்களில் வன்னிமரப் பட்டை, ஆல மர மற்றும் அரச மரக் குச்சிகளை பண்டிதர்கள் பயன்படுத்துகிறார்கள் (Macdonell & Keith, Vedic Index, Delhi, 1982). வன்னி மரம் சனி பகவானுக்கும் புனிதமானது என்று செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் பலவும் உண்டு. வன்னி மரப் பட்டைகள், இலைகள், பழம் மற்றும் அதன் மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த மர இலைகளின் சாற்றை அருந்தினால் மூட்டு வலி, தசை வலி மற்றும் பித்த வியாதிகள் குணமாகும். கர்பிணிகள் இந்த மரத்தின் மலர்களை சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படாது. இந்த மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலையின் சாறுகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் பாம்புக் கடி விஷம் முறியும் (Shanmugam N. K. Mooligai Kalai Kalanjiyam, Madras, 1989).

மிகவும் வலிமையான இந்த மரத்தின் கட்டைகளைக் கொண்டு விவசாய நிலங்களில் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மரத்திலான கருவிகளை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு வன்னிமரம் குலதெய்வத்தைப் போன்ற பாதுகாப்பைத் தரும் மரம். ஆகவே வன்னியர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதிக் காரியங்களில்-தகனத்திற்கு- வன்னி மரக் கட்டைகளையே பயன்படுத்துவார்கள்.

தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலை ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குதான் அவர் பிரணவ மந்திரத்தை சிவனுக்கு போதித்தாராம். ஆகவே அந்த ஆலயத்தில் உள்ள ஸ்வாமிநாத ஸ்வாமியை தகப்பன் ஸ்வாமி என்றே அழைக்கின்றார்கள். சிவனை மாணவராகவும், முருகனை குருவாகவும் சித்தரித்து உள்ளார்கள்.

சிவனுக்கும், விஷ்ணு ஆலயங்களிலும் புனிதமாக கருதப்படும் நெல்லி மரமே ஸ்வாமி மலையிலும் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் பழத்தில் லஷ்மி தேவி குடி இருப்பதாகக் கருதப்படுவதினால் அது வளமான வாழ்வையும், செல்வத்தையும் கொடுக்கும் மரம் என்கிறார்கள். கனகதாரா ஸ்தோத்திரத்தை தோத்திரம் செய்து தனக்கு நெல்லிக் கனியைத் தந்த ஏழைப் பெண்ணை ஆதி சங்கரர் பெரும் செல்வந்தர் ஆக்கினார் என்பது கதை.

நெல்லிக்காயை அமலாக்கி பழம் என்று குறிப்பிட்டு அதைப் பற்றிய செய்திகள் ஜைமீனிய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், குமார புராணா மற்றும் சங்கரத புராணா போன்ற பல மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாஞ்சியில் உள்ள ஸ்தூபாவிலும் நெல்லி மரத்தின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதிக சத்து உள்ள பழம் மட்டும் அல்ல, நெல்லி உயிர் அணுக்களை அதிகரிக்கும் குணம் கொண்டது.

ஆண் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த ஆலய மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிற்றைக் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் அதை கயற்றி விடுவார்கள். இந்த மரத்துக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் பசைகளை தடவி, குங்குமம் இட்டு , மாலைகளைக் கட்டி கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தின்படி இந்த மரம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நடப்பட வேண்டும். புராணக் கதை ஒன்றில் இந்த பிரபஞ்சமே பிரளயத்தில் முழுகியபோது அதைக் கண்டு பிரும்மா பயந்து போய் வாயை பிளந்து கொண்டு நின்றபோது அவர் வாயில் இருந்து கீழே சிந்திய உமிழ் நீரே நெல்லி மரமாக மாறியதாக (Padma Purana, Uttarakanda, 47. 7-11) கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்த புராணமோ பிரும்மா செய்த ஒரு தவத்தின் முடிவில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து இந்த மரம் வந்தது என்று கூறி உள்ளது (II, 4. 12. 13).

இந்த புராணக் கதைகளைத் தாண்டி இந்த மரம் மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உண்மை. இதன் இலைகள், கனி, பூக்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை சில மருந்துகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரு நெல்லிக் கனியின் சத்து மூன்று ஆப்பிள் பழங்களின் சத்துக்களுக்கு இணையானது.

இதில் வைட்டமின் C அதிகம். இந்தக் கனியை தேனுடன் கலந்து சாப்பிட்ட ஆஸ்துமா, TB எனும் நுரையீரல் நோய் , மார்புச் சளி, கல்லீரல் கோளாறு, சக்கரை வியாதி போன்றவை குணமாகும். பல் ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்கும். இந்த மரக் கனியை உண்டால் களைப்பு ஏற்படாது, மன அழுத்தம் குறையும். கண் பார்வைகளுக்கு நல்லது.

ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த கனியின் பதப்பட்ட சாறு ஜீரணக் கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்தி மூக்கு அடைப்பையும் விலக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து உள்ளார்கள். இந்த மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி பல்வலி, நரம்பு தளர்ச்சி எனப்படும் நடுக்கம், தொண்டை புண், போன்றவற்றை குணப்படுத்த மருந்துகளை தயாரிக்கின்றார்கள்.

கருப்பையை பலப்படுத்தும் மருந்தையும் இந்த மரத்தின் சில கலவைகளில் செய்கிறார்கள். தேள்கடியை குணமாக்க நெல்லி மரப்பட்டை மற்றும் வெங்காய சாறு இரண்டும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல இடங்களிலும் முருகனின் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று அந்தந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களை வணங்குகிறார்கள். அங்குள்ள மரத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல மரங்களும் அங்குள்ள தெய்வங்களுக்கு இணையானதே என்று நினைக்கின்றார்கள்.

அந்த மரங்களை வழிபடுவதின் மூலம் தமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்று நம்புவதினால் அவர்கள் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது போலவே அங்குள்ள ஸ்தல விருட்ஷங்களுக்கும் மாலைகள் போட்டு, பூஜைகள் செய்து அவற்றையும் வழிபடுகிறார்கள். ஆலயங்களில் உள்ள கருவறைக்கு சென்று தெய்வத்தின் பக்கத்தில் பக்தர்கள் நிற்க முடியாது. ஆனால் அவர்களால் ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களின் அருகில் அவர்களால் செல்ல முடியும்.

ஆகவே அவர்களது ஸ்தல விருட்ஷங்களின் மீதான நம்பிக்கை அபாரமானது. அந்த ஸ்தல விருட்ஷங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த மரங்களில் இருந்து செய்யப்படும் மருந்துகள் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைத் தவிர இயற்கை சூழ்நிலையை பாதுகாக்கவும் மரங்கள் இன்றி அமையாதவை.

ஆகவே சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது மக்களின் கடமை. ஸ்தல விருட்ஷங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் அந்த மரங்களைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டு, அவற்றை புனிதமாக போற்றி வணங்குவது மட்டும் அல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாப்பதையும் தமது கடமையாக நினைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர்களின் சார்ந்துள்ள மதங்கள் அனுமதிக்கும் எதையுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகின்றது . ஸ்தல விருட்ஷங்கள் அதற்கு ஒரு உதாரணம். முருக வழிபாடும் ஒரு விதத்தில் இதற்கு உதவுகின்றது.

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

Tipu Sultan “s Golden Ring With Inscription ‘ RAMA’ in Devanagari Script …

It is through the private commerce of the auction house that many a precious relic of India’s history has come to light.

 

On May 22, a remarkable artifact that illuminates a watershed moment in India’s history will be auctioned by the leading London auction house Christie’s — and presumably thereafter vanish forever from the public eye.

A heavy gold ring worn by 18th century ruler Tipu Sultan during his last campaign against the British in 1799 will be sold as part of the ‘Raglan Collection: Wellington, Waterloo & The Crimea.’

Unusually, the 41.2 gm oval ring has the name of the Hindu God Rama in raised Devanagari inscribed on it.

It was taken off the finger of the dead ruler by the Duke of Wellington, Arthur Wellesley, as his personal spoil of war after the Battle of Seringapatam in 1799.

The ring then found its way into the hands of another military family, that of FitzRoy Somerset, the 1st Baron Raglan. A famous soldier of the early 19th century, he joined Duke Wellington’s service in 1808 and rose to become his right-hand man for the next 40 years. He fought in major campaigns under Duke Wellington, including Waterloo and in the Crimea.

FitzRoy Somerset married the Duke’s favourite niece Emily Wellesley-Pole who was in possession of the ring, a gift from her uncle.

The ring has been valued at £10,000 to £15,000 and is part of the private collection of Fitzroy John Somerset, the great great grandson of the 1st Baron Raglan. The collection contains items that have been the possession of the family from 1858, including historical medals, arms and armour, militaria, pictures, furniture, silver, books, Indian weapons and works of art, as well as a selection of art.

Though a small object of personal use, the ring with its inscription awakens the spirit of the unusual 18th ruler who was its owner.

The historical record shows Tipu as Catholic in his religious outlook and forward-looking in his world-view. He sought out what was modern and transformatory for the time, putting it to use in his paramount objective of defeating the British.

Keywords: Christie’s, Tipu Sultan

 

source::::: The Hindu. …. English Daily

natarajan

படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

” அச்சம் என்பது மடமையடா …”

Dr .Karthikeyan in The Hindu….Tamil….

புணேவில் உள்ள அந்த வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அங்கு என் தமிழ் நண்பர் மனித வளத்துறை தலைவராக இருக்கிறார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு மட்டும் நூறு பொறியாளர்களை வேலைக்கு எடுத்து பராமரித்து வருவதாகச் சொன்னார்.

அந்த புனித பசுக்கள்தான் நிறுவனத்தின் எதிர்காலம் என்றும் அவர்களை நிறுவனம் எப்படியெல்லாம் போஷிக்கிறது என்றும் விளக்கினார். அந்த கம்பெனியின் தாயகம் ஜெர்மனி என்பதால் அடிக்கடி அங்கு செல்லும் வாய்ப்பையும் அடுத்த நூற்றண்டின் தொழில் நுட்பத்தை உருவாக்கும் அற்புத வாய்ப்பையும் இவர்கள் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் சொன்னார்.

தமிழ்நாட்டிலிருந்து எத்தனை மாணவர்களை எடுத்தீர்கள் என்று கேட்டேன். வடக்கில் படித்த தமிழ் மாணவர்கள்தான் தன்னிடம் இருப்பதாகவும், தமிழ் நாட்டுக் கல்லூரிகளிலிருந்து எடுக்க முடியவில்லை என்றும் சொன்னார். ஏன்? அயல் நாட்டினர் பங்கு கொள்ளும் கடைசி கட்ட நேர்காணலில் ஆங்கில அறிவும் தன்னம்பிக்கையும் குறைவாக உள்ளதாக சொல்லி தமிழ் மாணவர்கள் வடிகட்டப்படுவதாகச் சொன்னார். “எல்லாம் தெரிஞ்சும் நம்ம பசங்க தைரியமா வாயை திறந்து ‘இது எனக்குத் தெரியும்’னு பளிச்சுனு சொல்ல மாட்டாங்க!” என்றார்.

வடக்கே உள்ளவர்கள் தெற்கிலிருந்து வருபவர்களை வாயில்லா பூச்சி போல பார்ப்பது நிஜம். அதை நிரூபிக்கும் விதமாக நம் மக்கள் பம்முவதும் நிஜம்தான்!

“தேசிய நீரோட்டத்தில் வடக்கும் மேற்கும் ஆதிக்கம் செய்கின்றன. தெற்கும் கிழக்கும் அடங்கிப் போகின்றன” என்று நண்பர் சொன்னதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.

தாழ்வு மனப்பான்மை

சேத்தன் பகத் எழுத்துகளும், ஷாருக்கான் படங்களும், மும்பை கம்பெனிகளின் விளம்பரங்களும் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதற்கு சாட்சி. நாம் வாயை திறக்க முடியாததற்கு ஹிந்தி தெரியாதது மட்டும் காரணம் இல்லை. தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் பெரும் காரணம். தமிழ் தெரியாவிட்டாலும் இங்கு வந்து பிழைப்பவர்களுக்கு இருக்கும் திமிரும் தினவும் நமக்கு இல்லை.

எல்லா காலங்களிலும் படித்து விட்டு வேலைக்கு ஏங்கி நிற்கும் கூட்டமாகத்தான் சுதந்திர இந்தியாவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் வெள்ளைச்சட்டைக்குரிய பணிகளோ அல்லது அடித்தள வேலைகளோ அதிகம் பார்த்ததினால் நம்மை ஒரு பொருட்டாக அவர்கள் மதித்ததில்லை. அரசியல், சினிமா, வியாபாரம் என எல்லா துறைகளிலும் நம் அறிவு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு நடக்கவில்லை.

அதேபோல எங்கும் தமிழர் தன்னையும் தன் இனத்தையும் நிலை நிறுத்துவதற்கான வேலையைச் செய்யவில்லை.

வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு

போர்க் குணம் எல்லாம் புற நானூற்று காலத்துடன் போய் விட்டது. கடைசியாக தமிழன் தானாக சென்று ரத்தம் சிந்தியது ஹிந்தி எதிர்ப்பிற்காக 1965ல். பிறகு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக வரலாறு மறந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறான். இங்கு பணி செய்ய, வியாபாரம் செய்ய என சகலத்திற்கும் வெளி மாநிலத்தினர் வந்தாயிற்று. உள்ளுக்குள்ளேயே விலை போகாத தமிழன் வெளியே போய் வேலை பார்ப்பது எவ்வளவு கடினம்?

பேசியதில் கசப்புதான் மண்டியது. நாம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். “எது படிச்சாலும் நல்லா தைரியமா பேசணும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கற தைரியம் வேணும். நிறைய வெளியே வரணும்” என்றெல்லாம் எழுதுங்க என்றார் நண்பர். இதோ எழுதிவிட்டேன்!

வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தேன்.

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” என வீர முழக்கம் ஒவ்வொரு கல்லூரியிலும் முழங்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் படித்தபின் ஒரு அயல் நாட்டு மொழியும் ஹிந்தியும் கட்டாயமாக கற்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வெளி மாநில அனுபவம் அவசியம். குறைந்தது ஒரு வார கல்விச் சுற்றுலாவாவது கூட்டிச் செல்ல வேண்டும். பல கல்லூரிகளில் இது நடப்பதே இல்லை.

விடுமுறை காலத்தில் வெளி மாநிலத்தில் கட்டாயமாக ஒரு பிராஜக்ட் செய்ய வேண்டும் என்று கல்லூரிகள் மாணவர்களை பணிக்க வேண்டும். மாற்று கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அதே நேரம் நம் கலாச்சாரத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் தன்னம்பிக்கை தளர்வதை தவிர்க்க இயலாது.

நம் மாணவர்களின் வேலைத்தகுதிக் குறைவு என குறைபடுபவர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

அதேபோல வெளி மாநில, வெளி நாட்டு தமிழ் சங்கங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் நின்று விடாமல் நம் தமிழ் மாணவர்கள் பிற கலாசாரங்களில் வேரூன்ற உதவ வேண்டும். இந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளை நடத்தலாம். அந்த காலத்தில் கோயில் உள்ள ஊர்களில் தன் இன மக்களுக்காக சத்திரம் கட்டி வைத்தார்கள். வரும் விருந்தாளிகளுக்கு உணவு உபசரிப்பு மட்டுமின்றி ஒரு கலாசார பரிவர்த்தனைக்கும் அது வழி செய்யும். அதுபோல இந்த தமிழ் சங்கங்கள் இயங்க ஒரு விரிவான செயல் திட்டமே தீட்டலாம்.

`மினி ஆந்திரா’

மதராஸ் ஐ.ஐ.டி க்குள் ஒரு மினி ஆந்திராவே உண்டு. பல ஐ.டி. கம்பெனிகளில் நிர்வாகம், மனித வளம் போன்ற பிரிவுகளில் கேரள ஆதிக்கம் உண்டு. பல வட நாட்டுத் தலைவர்கள் கொண்ட தென்னாட்டு நிறுவனங்களில் இங்குள்ள பணியாளர்களுக்கு ஹிந்தி வகுப்பு நடக்கிறது. அதுபோல பல நிறுவனங்களில் தமிழ் நாட்டு பணியாளர்கள் (கீழ் நிலைகளில் மட்டுமல்ல!) வேண்டாம் என வெளி மாநிலத்தினரை நாடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவை எல்லாம் இயல்பாக நடைபெற்றவை அல்ல.

உள்ளுக்குள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வெளியே போகவும் அச்சப்பட்டு நிலை குலைந்து நிற்கிறான் தமிழன். கடாரம் கொண்டான் என்று பெருமையோடு பேசப்பட்ட இனம் இன்று காட்பாடியை தாண்டுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது!

gemba.karthikeyan@gmail.com

Keywords: மனித வளம், கார்த்திகேயன், தமிழர்கள், தமிழ் மொழி, மொழி வளம், தாழ்வு மனப்பான்மை, வேலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு
Topics: வணிகம்|

source:::: Dr. Karthikeyan in The Hindu …TAMIL

Natarajan

” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

நமஸ்காரம்.

சுவாரஸ்யமான சில அனுபவங்களை உடனுக்குடன் போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவசர கதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதில், முடியாமல் போகிறது.

அப்படித்தான் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வியந்து வியந்து பார்த்தேன். நெகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஆன்மிக அன்பர்கள் அதைப் படிக்க வேண்டும் என்று பதிவிட விரும்பினேன். ஆனால், நேரம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது இதைப் பதிவிடுவதற்கு பெங்களூரு மகா பெரியவா அத்யந்த பக்தர் திரு. கார்த்தி நாகரத்தினம் புண்ணியம் கட்டிக் கொண்டார். தேங்க்ஸ் கார்த்தி.
முதலில் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் அன்று எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கில் துவங்கியது (ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது வியாழன் அன்று). அன்றைய தினம் எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

இதற்கான அழைப்பிதழை ‘க்ளேரியன் காஸ்மடிக்ஸ்’ நிறுவனத்தார் தயார் செய்திருந்தார்கள். என் தொடர்புடைய எந்த ஒரு அழைப்பிதழாக இருந்தாலும் சரி… நல்ல நிகழ்வாக இருந்தாலும் சரி… காஞ்சி ஸ்ரீமடம் போய் மகா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசி பெற்று அதன் பின் பணிகளைத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த அழைப்பிதழ் வந்தும், உடன் நான் காஞ்சிக்குப் போக முடியவில்லை. என்ன ஒரு சமாதானம் என்றால், எப்படியும் இன்னும் நான்கைந்து நாட்களில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் வந்து விடும். அவற்றைக் கொண்டு போய் அதிஷ்டானத்தில் வைக்கலாம் என்று நேரம் கருதி எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அழைப்பிதழின் பிரதிகளை கூரியர் மூலம் அனுப்பத் தொடங்கி விட்டோம். சிறப்பு அழைப்பாளரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய இணை இயக்குநர் திருமதி. காவேரி மேடத்துக்குக் கொடுக்கலாம் என்று மயிலை போனேன். நேரில் கொடுத்தேன். அங்கிருந்து இன்னொரு நண்பர் மூலமாக திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கலாம் என்று என் மனைவி, மகளோடு புறப்பட்டு விட்டேன்.

அன்று சனிக்கிழமை (5.4.2014). ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமான கூட்டம். நண்பர் உதவியால் சிறப்பு தரிசனம் முடித்த பின் இதர சந்நிதிகளைத் தரிசித்துக் கொண்டு வரும்போது பின்பக்கம் உள்ள ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கப் போனேன். திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதிக்கு எவ்வளவு மரியாதையோ, அந்த அளவுக்கு ஸ்ரீநரசிம்மருக்கும் உண்டு. இந்த ஸ்ரீநரசிம்மர் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். தனி கொடி மரம், வைபவங்கள் எல்லாமே உண்டு. எப்போதும் இவர் சந்நிதியிலும் கூட்டம் இருக்கும்.

நரசிம்மரைத் தரிசிக்கப் போனோம். கூட்டமான கூட்டம். உள்ளே சந்நிதியில் இருந்த பட்டாச்சார்யர் ஆரத்தி காண்பித்து விட்டு வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். என்னிடம் காண்பிக்கும்போது ‘பெரியவாளைப் பாக்க நாளைக்குப் போவேளா?’ என்று கேட்டார். அவரை அதிசயமாகப் பார்த்தேன். இருவருக்கும் அறிமுகம் இல்லை.

‘பெரியவா’ என்றால், என்னைப் பொறுத்தவரை ‘மகா பெரியவா’தான் என்றாலும், ஒரு வைணவ ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர் யாரை பெரியவா என நம்மிடம் குறிப்பிடுகிறார் என்று குழம்பி, ‘‘புரியல’’ என்று சொன்னேன்.

பிறகு தெளிவாக, ‘‘மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு நாளைக்குப் போவேளானு கேட்டேன்’’ என்றார்.

தூக்கி வாரிப் போட்டது. ‘இவர் ஏன் கேட்கிறார்? காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கா என்ன?’.

பிறகு சொன்னேன்: ‘‘நாளைக்குப் போற ஐடியா இல்லே. இன்னும் மூணு, நாள் கழிச்சுப் போவேன்’’ (புது புத்தகம் அப்போதுதான் அச்சகத்தில் இருந்து வரும். அதை வைக்கும் எண்ணத்தில் சொன்னேன்).

‘‘ஜீ தமிழ்ல தெய்வத்தின் குரல் டெய்லி பாக்கறேன். நன்னாருக்கு’’ என்றவர், ‘‘ஒரு நிமிஷம் இருங்கோ’’ என்று கருவறைக்குள்ளே போய் விட்டு ஸ்ரீநரசிம்மரின் பின்னால் இருந்து ஒரு பெரிய சம்பங்கி மாலையை எடுத்து வந்தார். என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘நீங்க எப்ப காஞ்சிபுரம் அதிஷ்டானம் போறேளோ, அப்ப இதை அவருக்கு சமர்ப்பிச்சிடுங்கோ’’ என்றார். ஸ்தம்பித்துப் போனேன்.

‘புத்தக ரிலீஸுக்குப் பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்துண்டு இருக்கே… எனக்கு இன்னும் கொடுக்கலையேடா’ என்று மகா பெரியவாளே கேட்பது போல் ஒரு எண்ணம் அந்த வேளையில் வந்தது.

புத்தம் புது மாலையை பவ்யமாகக் கைகளில் வாங்கிக் கொண்டேன். ‘‘நிச்சயம் சமர்ப்பிச்சிடறேன்’’ என்று புறப்பட்டேன்.

பயணத் திட்டத்தை மகா பெரியவா ஏற்படுத்திக் கொடுக்கிறார். ‘மலர் மாலையோட பத்திரிகையும் கொண்டு வாடா’ என்று சொல்றார் போலிருக்கு.

அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சம்பங்கி மாலையுடனும், புத்தக ரிலீஸ் பத்திரிகையுடனும் காஞ்சிக்கு ஒரு டிராவல்ஸ் வண்டியில் புறப்பட்டு விட்டேன்.
………………………………………………..
இதில் பெங்களூரு கார்த்தி நாகரத்தினம் எங்கே வந்தார்?

பெரியவா மகிமை பற்றி அவர் ஓர் அனுபவத்தை எடுத்துச் சொல்ல… நான் இந்த திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மர் அனுபவத்தைச் சொன்னேன். அப்போது நரசிம்மருக்கும் பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்லி, ‘எல்லாம் அவரது விளையாடல்தான்’ என்றார். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
…………………………………………………
இந்த நேரத்தில் இன்னொரு நரசிம்மர் அனுபவமும் என் நினைவுக்கு வருகிறது. நான் ‘மகா பெரியவா மகிமை’ பற்றிப் பேச வந்த நேரம் அது… 2012-ஆம் வருடம் ஒரு புரட்டாசி சனி என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் சென்னை தி.நகர் பாண்டி பஜார் பாலாஜி திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். சனி காலை 9.30 மணிக்கு அவர் சொற்பொழிவுக்கு முன்னால் என்னை அரை மணி நேரம் பேசுமாறு – அதாவது 9.00 – 9.30 வரை பேசுமாறு பணித்திருந்தார். அன்று காலை இல்லத்தில் இருந்து சீக்கிரமாகக் கிளம்பினேன்.

மகா பெரியவா தொடர்பாக என்னென்ன சம்பவம் சொல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். இடையே, நேரம் இருந்தால் – ஒரு நரசிம்மர் அனுபவத்தைச் சொல்லலாமா வேண்டாம என்று யோசித்தேன். ஆனாலும், நரசிம்மர் அனுபவத்தை சொல்வது அநேகமாக என் திட்டத்தில் இல்லை (ஒரு பெண்மணிக்குப் பிரசவ காலத்தில் கனவில் நரசிம்மர் வந்து ‘என் பெயர் வை’ என்று சொன்ன சம்பவம் அது)

ஏனோ, தொடர்பே இல்லாமல் சிவா விஷ்ணு கோயில் வழியாகப் போக நேர்ந்தது. கோயிலுக்குள் போகாமல் செல்ல மனமில்லை. உள்ளே போனோம். விறுவிறுவென்று சுற்றி விட்டு வெளியே வருவதாகத் திட்டம். வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து பாலாஜி திருமண மண்டபம் போக வேண்டும். மணி இங்கேயே 9 ஆகப் போகிறது. எனக்குள் பதட்டம், தாமதம் ஆகி விடுமோ என்று.

பிராகாரம் சுற்றி வரும்போது ஸ்ரீநரசிம்மர் சந்நிதியில் இருந்த ஒரு பட்டாச்சார்யர் (அறிமுகம் இல்லை) எங்களைப் பார்த்து, ‘ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வாங்கோ. அபிஷேகம் பண்ணிட்டு, ஆரத்தி காண்பிக்கறேன். பாத்துட்டுப் பிரசாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாமே ரெடியா இருக்கு’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார்.

திவ்ய தரிசனம். நரசிம்மரைப் பத்தி மொதல்ல சொல்லு என்று மகா பெரியவாளே எனக்கு அறிவுறுத்துவதாக எண்ணி, அந்த சம்பவத்தைதான் பாலாஜி திருமண மண்டபத்தில் முதலாவதாகச் சொன்னேன்.
……………………………………
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

source:::: Experience of Shri. Swaminathan, my Friend thro email

natarajan

” நான் தான் அவனைத் திருட சொன்னேன் ….!!! “

Source: Dinamalar dated 29 April 2014  & http://www.periva.proboards.com

natarajan

 

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, “”வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா…” என்றவர், அவரை நிறுத்தி, “”அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,” என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,’ என்றார்.

“”ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

“”எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,” என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, “”அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,” என்றார்.

அய்யர் அலறாத குறை தான். “”பெரியவா! மன்னிச்சுடுங்கோ” என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.