அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ – ஒரு நிகழ்கால சாதனைக் கதை…

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் – ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.

அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்…’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்… பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க… ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி – அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

– டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Source….www/tamil.thehindu.com

Natarajan

” இரவும் பகலும் ஓய்வில்லை …இவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை …” !!!

1. துடிப்பிருக்கும் இதயமல்ல… இரவு பகல் விழித்திருக்கும் கண்ணுமல்ல…
அது என்ன?
2. இளஞ்சிவப்பு ராணி… இரு பதினாறு சிப்பாய் காவல்… இது என்ன?
3. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள்… இவை என்ன?
4. உருவத்தில் சிறியவன்… படபடவெனப் பொறிவான்… இது என்ன?
5. ஈட்டி படை வென்று, காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு.. அது என்ன?
6. ஊதினால் பறக்கும், அதன் மதிப்பை உலகமே மதிக்கும். அது என்ன?
7. ஐந்து அடுக்கு… நான்கு இடுக்கு…
இது என்ன?
8. இரவும் பகலும் ஓய்வு இல்லை… அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை… இவன் யார்?
9. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதளவும் கேட்காது… இது என்ன?

விடைகள்:
1. கடிகாரம்; 2. நாக்கு; 3. பால், தயிர், நெய்; 4. கடுகு;
5. பலாப்பழம்; 6. ரூபாய் நோட்டு; 7. விரல்கள்;
8. இதயம்; 9. கண் இமை.

Source….www.dinamani.com

Natarajan

படித்து ரசித்தது …”காலம் படைத்த கவியும் – காலத்தைப் படைத்த கவியும்…”

 

 

 

Bharathidhaasan

 

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விஞ்ஞானம். காலத்தின் வெற்றிடத்தை ஒரு கவிஞனைக் கட்டமைத்து நிரப்பும் சமூக இயங்கியல்.

அப்படிக் காலத்தின் வெற்றிடத்தை நிரப்ப வந்த கவியாகத்தான் பாவேந்தர் என்ற பேராளுமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் வெளிவந்த காலத்தின் வெளிச்சத்தைக் கொண்டு காண வேண்டும் அவரது பெருமையின் திருமுகத்தை.

தமிழனுக்குத் தேசியமென்றால் இந்தி; அனைத்துலக மொழியென்றால் ஆங்கிலம்; இசையென்றால் தெலுங்கு; வழிபாடு என்றால் வடமொழி; அடுக்களையில் கூட அருந்தமிழ் ஆட்சி செலுத்துமா என்பது கேள்விக்குறி? – இது ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் அற்றை நாள் படப்பிடிப்பு.

மொழியென்பது வெறும் கருவிதானே; பொருள் சுட்டும் ஒலிக்கூட்டம்தானே; இதில் என்ன இருக்கிறது என்று கேட்டாரும் கேட்பாரும் உளர்.

அது சரியில்லை.

மொழி அளாவிய எல்லை வரையில்தான் நிலமிருக்கிறது. நிலம் அளாவிய எல்லை வரையில்தான் இனமிருக்கிறது. மொழி முடியுமிடத்தில் இனம் முடிந்துபோகிறது. ஆகவே, மொழிதான் இனம், மொழிதான் நிலம்.

கால்டுவெல்லும், பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், மறைமலையடிகளும் முன்னெடுத்தோடிய இந்த முதற்சுடரைத் தீப்பந்தமாய்க் கொளுத்திக்கொண்டது திராவிட இயக்கம். அந்தத் தீப்பந்தத்தின் இலக்கியக் கொழுந்தாய் எரிய வந்தவரே பாரதிதாசன்.

அரசு – ஆலயம் – அதிகார மையம் – அன்றாடம் எல்லாம் பிறமொழிவயப்பட்டதில் தமிழை இழந்து நின்றது மெட்ராஸ் பிரசிடென்ஸி.

 

தமிழே வடமொழியின் குழந்தைதான். அதனால் இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று எண்ணியாரும் இருந்தனர் அன்று. ஆனால், “தமிழ் என்பது பிற மொழியின் வார்ப்பன்று, திராவிடத்தின் மூலக்கூறு’ என்ற ஆராய்ச்சி முடிவுதான் தமிழ் தேசிய விடுதலைக்கே வித்திட்டது.

திராவிடத்திலிருந்தே தமிழ் பிறந்தது என்றார் கால்டுவெல்.

த்ரவிட – திரமிட – திரமிள – தமிள – தமிழ். இல்லை, தமிழிலிருந்தே திராவிடம் பிறந்தது என்றார் மறுசாரார். தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட. இவ்விரண்டில் ஏதொன்று ஏற்புடைத்தாயினும் தமிழ் வடமொழிச் சார்பில்லாதது என்பது பெறப்படும். பிறகு ஏன் தமிழ் தன் அதிகாரமிழந்து, அடையாளமிழந்து வடமொழி ஆதிக்கத்தில் வதைபட

வேண்டும்?

மொழியை மீட்டு மொழியிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும் தமிழ் தேசியம். காலத்தின் இந்தக் குரலைத் தன் கவிதையில் வாங்கி ஓங்கி ஓதிய ஒரு தனிப்புலவர் பாவேந்தர் பாரதிதாசன்.

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்

முன்னேற்றம் ஒவ்வொன்றும்

உன்முன் னேற்றம்

கண்டறிவாய் எழுந்திரு நீ

இளந்தமிழா கண் விழிப்பாய்

இறந்தொ ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை

பழம்பெருமை அனைத்தையும் நீ

படைப்பாய் இந்நாள்

தொண்டுசெய்வாய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

 

துடித்தெ ழுந்தே

என்ன ஒரு யாப்புச் செப்பம் – நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் – பனிக்கட்டி மீது உருண்டோடும் ஆப்பிள் போன்ற தடையற்ற ஓட்டம் – காலத்தைத் தூக்கி நிறுத்தும் கருத்து – இதை வாய்விட்டு வாசிக்கும் போதெல்லாம் 12 வயதில் நான் உற்ற உணர்ச்சியை – பெற்ற எழுச்சியை இன்றும் அடைகிறேன்.

எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும்.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்று நெடுங்கணக்கில் பாரதிதாசனைப்போல் முரண்பட்ட இரு ஆசான்களைக் கொண்ட கவி அதற்குமுன் இல்லை.

ஓர் ஆத்திகப் பெருங்கவிஞனும், ஒரு நாத்திகப் பெருந்தலைவனும் உனக்கு ஆசான்களாகத் திகழ்வார்கள் என்று காலம் கவிஞனுக்குக் கட்டளையிட்டது.

“மகனே! எட்டயபுரத்தில் கவிதையெடுத்துக்கொள், ஈரோட்டில் கருத்தை எடுத்துக்கொள்’ என்று காலம் திரட்டிக் கொடுத்த திருப்பொருள்கொண்டு தமிழ் தேசியத்தைக் கட்டமைக்கப் பிறந்த கவிதா மேதைதான் பாவேந்தர் பாரதிதாசன்.

இந்திய தேசியத்தை பாரதி வடிவமைத்ததைப்போல் தமிழ் தேசியத்தை பாரதிதாசன் வடிவமைத்தார். பாரதி மீது அவர் வைத்திருந்த பற்று இறுதி மூச்சுவரை இற்றுப்போகாதது.

பக்கத்திலிருக்கும் வெளிச்சத்தில்தான் படிக்க முடியும் என்பதுபோல அருகிருக்கும் ஆளுமைகளே இன்னோர் ஆளுமையை உண்டாக்குகிறார்கள்.

இராமலிங்க அடிகளாரும், மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், கோபாலகிருஷ்ண பாரதியும் பாரதியாருக்கு உந்து சக்தியாய் வாய்த்ததுபோல் பாரதியாரும், பெரியாரும், மறைமலையடிகளும் பாரதிதாசனின் வார்ப்புக்குக் காரணமானார்கள்.

பாரதியாரைவிட இலக்கணம் கற்ற பாரதிதாசன், கவிதையைக் கற்றுக்கொண்டது பாரதியாரிடம்தான். இதை பாரதிதாசனின் கூற்றாகவே இங்கு பதிவுசெய்கிறேன்:

“”அவரெழுதிய கையெழுத்துப் படிகள் அங்குமிங்குமாகக் கிடக்கும். ஒருநாள் அவர் எழுதும் விசிப்பலகை டிராயரை இழுத்துப் பார்த்தபோது பாஞ்சாலி சபதம் என்ற கையெழுத்துப்படி இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன். பாடல்கள் மிக எளிமையாகவும் புரியும்படியும் இருந்தன. அதேசமயம் மிகச் சுவையாகவும் இருந்தன.

இப்படி எளிதில் புரியும்படியான கவிதையை நான் பார்த்ததில்லை. புரியும்படி எளிதாகக் கவிதை எழுத முடியும் என்றும் நான் நினைத்ததில்லை.

அக் கையெழுத்துப்படி என் கவிதைப்போக்கில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. சுப்பிரமணியர் துதியமுது எழுதிய சுப்பு ரத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது”.

பட்டுக்கோட்டையிலிருந்து ஒருகுரல் பாரதிதாசனைச் சாடியது. அது என்ன பாரதிதாசன்? பாரதி ஒரு பார்ப்பனர். தாசன் என்பது வடசொல். அதற்கு அடிமை என்று பொருள்.

அப்படியானால் பாரதிதாசன், பாரதி என்ற பார்ப்பனருக்கு அடிமையா? இது கேள்வி. “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்’ – இது பாரதிதாசனின் பதில். பாரதிதாசனின் இந்த நேர்மை எப்போதும் பிடிக்கும் எனக்கு.

விமர்சனங்களை ஒரு கவிஞன் எப்படி எதிர்கொள்கிறான் – ஏற்றுக்கொள்கிறான் என்பதே அவனது வளர்ச்சி.

மற்போரிலும் சொற்போரிலும் மிக்கவராய்த் திகழ்ந்த பாரதிதாசன் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை.

தமிழுக்காகப் போராடிய கவிஞனின் தொடக்க கால எழுத்துகளில் தனித்தமிழ் இல்லை. வந்து விழுந்த வடமொழிச் சொல்லாட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.

மயிலைப் பற்றிப்பாடும்போது –

சாயல் உன் தனிச்சொத்து

ஸபாஷ் கரகோஷம் – என்று எழுதினார்.

கோகிலம் – கஜராஜ் – ஸரோஜா – ஸம்பாத்தியம் – நிஜம் – விஷம் என்றெல்லாம் வடசொல் ஆதிக்கம் கவிதையில் மிகுந்திருந்தன.

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் பேசிக்கொண்டிருந்தபோது மறைமலையடிகள் சொன்னாராம்:

பாரதியும் கவிஞனில்லை; பாரதிதாசனும் கவிஞனில்லை ஏன்? இருவருமே வடமொழி சொற்களைக் கலந்து பாட்டெழுதுகிறார்கள்.

ஒருவன் கவிஞனா, இல்லையா என்பதற்கு மறைமலையடிகள் அன்று வைத்திருந்த அளவுகோல் அதுதான்.

மறைமலையடிகளின் கருத்தை அப்பாதுரையார் பாரதிதாசனுக்குத் தெரிவித்த பிறகு அவர் படைத்த தனித்தமிழ்ப் போர்ப் பாட்டுதான் தமிழியக்கம் என்று அறியக் கிடைக்கிறது.

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாகிடை ஏறிய ருசியும்

என்று எழுதிப் பதிப்பித்தவர், இதில் ருசி வேண்டாமே சுவை என்றிருக்கலாமே என்ற பொன்னம்பலனார் கருத்தை ஏற்று அடுத்த பதிப்புகளில் “பாகிடை ஏறிய சுவையும்’ என்று மாற்றினாராம். இப்படிக் காலந்தோறும் தன்னைச் செதுக்கிச் செதுக்கி வளர்ந்திருக்கிறார் அந்தச் செம்மாந்த கவிஞர்.

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்தவர்கள் உற்றாய்ந்து கற்றால் ஒன்றைக் கண்டறியலாம். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் தன்னிலை ஒருமையிலும் முன்னிலையிலுமாகவே இயங்கி வந்திருக்கின்றன. சங்க இலக்கியங்களும், சமய இலக்கியங்களும் கூட இவற்றுக்கு முற்றிலும் விதிவிலக்கல்ல.

நின் – என் – உன் என்றுதான் பல பாடல்கள் பேசுகின்றன. பாரதிக்குப் பிறகுதான் தமிழ்க் கவிதை எங்கள் – எம் – யாம் என்று பாட ஆரம்பித்தது.

பொழுதெலாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ

எங்கள் பாரத தேசமென்று

தோள்கொட்டுவோம்

-என்று பாரதி குரல் ஒலித்தது.

அதைத் தொடர்ந்து –

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

-என்று பாவேந்தரின் பேரோசையாய் அதிர்ந்தது.

என் – நின் என்பன பெரும்பாலும் கடவுளோடு பேச. எங்கள் – யாம் என்பன மக்களோடு பேச. மக்களோடு பேசியவர், மக்களுக்காகப் பேசியவர் மாகவிஞர் பாவேந்தர்.

தாலாட்டு என்பது பழைய வடிவம்.

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு

நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு

-என்று தொட்டிலுக்குள் பகுத்தறிவை விதைத்தது பாரதிதாசன் பாட்டு

தாமரைத் தடாகம் என்பது பழைய படிமம்.

தாமரைபூத்த தடாகங்களே – உமைத்

தந்தஅக் காலத்திலே – எங்கள்

தூய்மைச் சகோதரர் தூர்ந்து

மறைந்ததைச்

சொல்லவோ இந்த ஞாலத்திலே

-என்று தாமரைப் பூவில் உழைக்கும் மக்களின் உள்ளங்கைச் சிவப்பைச் சிந்தித்தது பாவேந்தர் பாட்டு.

பகுத்தறிவு, சீர்திருத்தம், காதல், குடும்பம், கலை, கல்வி, அரசியல், அறவியல், அறிவியல், அழகியல் என்று வாழ்வின் அத்தனை வெளிகளையும் அளாவித் துழாவியது பாவேந்தரின் படைப்பு விறல் அல்லது விரல்.

பாவேந்தர் அரசியல் அறிந்தவர், தேர்தலிலும் வென்றவர். ஆனால், அரசியலில் அவர் கரைந்துபோகவில்லை. பெருங்கவிஞர்கள் யாரும் அரசியலை வென்றெடுத்ததில்லை. காரணம், கவிதை என்பது மறைத்ததைப் புலப்படுத்துவது. அரசியல் என்பது பெரும்பாலும் புலப்பட்டதை மறைப்பது. பாவேந்தர் மறைக்கக் கற்றுக்கொள்ளவில்லை.

திரைப்படத் துறையிலும் தன்னை அவர் தோய்த்துக் கொண்டார். இறுதியில் தேய்த்துக் கொண்டார். அதில் பொருளீட்டுவது அவருக்கு இரண்டாம் நோக்கம். அந்த ஊடக வழியே தமிழ் பரப்புவதே முதல் நோக்கம்.

பராசக்தி படத்தின் தொடக்கப் பாடலாக “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு’ இடம் பெற வேண்டுமென்று வேண்டியபோது, பணமே வேண்டாம். பாட்டு இடம்பெற்றால் போதும் என்று பெருமிதத்தோடு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர்.

அவர் கோபக்காரர் – பாயும் புலி – சீறும் சிங்கம் என்றெல்லாம் உருவகப்படுத்துவார்கள். பல நேரங்களில் அவர் குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்வுகளைப் படித்தறிகிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் அவர் வசனமெழுதிய “சுலோச்சனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வருணன் – வாயு – இந்திரன் முதலியவர்களை இந்திரஜித் சிறைப்பிடிக்கிறான். பிரம்மதேவன் இலங்கை வந்து இராவணனை வேண்டுகிறான்.

“இராவணேஸ்வரா! என் பொருட்டாவது அமரேசனை விடுவித்து அளகாபுரியை அழியாமல் காப்பாற்ற வேண்டும்’ என்று பாவேந்தர் வசனமெழுதியிருக்கிறார்.

அந்த வசனம் பேசி பிரம்மதேவனாக நடித்த தேவராஜ நாயுடு கொஞ்சம் தமிழறிந்தவர். நடிப்பதை நிறுத்திவிட்டு “அய்யோ, அளகாபுரி குபேரன் தலைநகரமாயிற்றே… அமராவதிதானே இந்திரன் தலைநகரம்’ என்று தயங்கி நின்றாராம்.

பாரதிதாசனை அவசரமாய் அழைத்துக்கேட்டதும் “ஆமய்யா… ஆமய்யா… நீ சொல்றது சரிய்யா…’ என்று குழந்தைபோல் திருத்திக் கொடுத்தாராம்.

விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு ஆண்மை வேண்டும்; அதை ஏற்றுக்கொள்வதற்குப் பேராண்மை வேண்டும்; அந்தப் பேராண்மை பெற்ற பெருங்கவிச் சிங்கம் பாரதிதாசன்.

அன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைமையில் அமைச்சர்களும் தமிழறிஞர்களுமாய் ஓர் ஆலோசனைக் கூட்டம், நானுமிருந்தேன்.

“பாவேந்தர் புதைக்கப்பட்ட இடத்தை நினைவுச்சின்னமாக மாற்ற இயலாதா?’ என்ற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது.

மிகுந்த சோகத்தோடு முதல்வர் உதடு பிதுக்கினார். பாரதிதாசனின் காதலர் அவர். பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியவரும் அவர்தான்.

“என்ன தயக்கம் என்று கேட்டேன்?’

பொது இடுகாட்டில் பத்தோடு பதினொன்றாய்ப் புதைக்கப்பட்டுவிட்டார் பாவேந்தர். அந்த இடத்தில் மண்டபத்திற்கு வசதியில்லை; அங்கு தூய்மையும் இல்லை’ என்றார் வருத்தத்தோடு.

பாவேந்தரின் இடுகுழி மட்டுமா தூய்மையாக இல்லை?

தமிழ்… தமிழ் உணர்வு… தமிழர் மேம்பாடு… எதில் இன்று தூய்மையிருக்கிறது?

அதிகார மையங்களில், ஆலயங்களில், நீதிமன்றங்களில், கல்விக் கூடங்களில், கலை ஊடகங்களில், பத்திரிகைகளில், வானொலிகளில், சமூக வலைத்தளங்களில் தமிழுக்கான இடம் தார்மீகமாகவும் அதிகாரபூர்வமாகவும் என்று உறுதிப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் பாரதிதாசன் மீண்டும் விழித்தெழுவார்.

கவிஞனுக்கேது மரணம் நீண்ட உறக்கம்தான்.

Source…..கவிஞர் வைரமுத்து in http://www.dinamani.com

Natarajan

“தமிழுக்கும் அமுதென்று பேர்”… இணையத் தமிழனையும் ஈர்க்கும் பாடல்….

தமிழுக்கும் அமுதென்று பேர். பாரதிதாசனின் இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக் கிளி படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை பாடி இருப்பார்.மிக மிக மென்மையான இந்தப் பாடலைக் கேட்கும்போதே நம்மை மெஸ்மரிசம் செய்த உணர்வு ஏற்படும்.

இந்த தலைமுறையில் இந்தப் பாடலை கேட்பதற்கான அல்லது ரசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறீர்களா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமான படம் ‘வானவில் வாழ்க்கை’. இதில் பாரதிதாசன் பாடல் வரிகளைக் கொண்டு கல்லூரி கலைநிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடுவதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனின் டிரெண்டி இசையில், ஜித்தின், ஜனனி ஆகிய இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். பாடலின் தன்மையை சிதையாமல், இசையோடு கலந்த அந்தப் பாடலை பார்த்து, கேட்டு ரசிக்க:

Source……..www.tamil.the hindu.com

Natarajan

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!….

 

கதை, கவிதை, கட்டுரை எனக் கற்பனைக் கடிவாளங்களை அவிழ்த்துவிட்டு வலைப்பதிவுகளில் அதைத் தொடுப்பவர்கள் பலர். அவர்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்கத் தமிழக ஆசிரியர்களுக்காகவே இயங்கி வருகிறார் சுரேஷ்.

அவரின் http://www.tamilagaasiriyar.com/ வலைதளம், அரசு வெளியிடும் அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பாடங்கள் சார்ந்த கையேடுகள், பாடப் புத்தகங்கள், பவர் பாயிண்ட் விளக்கக் காட்சிகள், பொது அறிவு சார்ந்த புத்தகத் தொகுப்புகள், ஆய்வுக் குறிப்புகள் என அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது.

வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் விதமாக சம்பளப் பட்டியலுக்கான பே-ரோல் மென்பொருளின் இணைப்பு, வருமான வரி குறித்த சந்தேகங்களுக்கான விளக்கப் பட்டியல் ஆகியவையும் இத்தளத்தில் உண்டு.

தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் தொகுத்து, பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இத்தளத்தில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாய் ‘சர்வ சிக்‌ஷ அபியான்’ திட்டக் கொள்கைகள், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடுகள், பொதுத்தேர்வு பற்றிய வழிகாட்டிகள் போன்றவை உள்ளன.

தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்காக CCE எனப்படும் ‘தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு’ முறையின் மென்பொருளும் இங்கே உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உள்ளீடு செய்தாலே, அது கிரேடாக மாற்றப்பட்டு, முழுமையான தர அறிக்கையைப் பெற முடிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினா விடைகள் அடங்கிய தொகுப்பு, பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள், சுற்றறிக்கைகளின் நகல்கள், காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு, பள்ளிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைகள் போன்றவையும் லிங்க்குகளாய் இங்கே காணக் கிடைக்கின்றன.

இவை போக சுவாரசியமான கணிதப்புதிர்களும், பொது அறிவுத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய வழிகாட்டி கையேட்டின் இணைப்புகளும் இத்தளத்தில் அடக்கம். யாருக்கெல்லாம் பச்சை மையில் கையெழுத்திட அதிகாரம் உள்ளது போன்ற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விவரங்கள் இங்கே பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மேலே என்ன படிக்கலாம், எவ்வகையான உயர்கல்வி தங்களின் முன்னேறத்துக்கு உதவும் என்பது போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்லாது, செல்பேசி, டேட்டா கார்டு மற்றும் டிடிஹச்களை ரீசார்ஜ் செய்வதற்கான தளங்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. செல்பேசி மற்றும் மின் வாரியக் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்புகளும் இதில் அடக்கம்.

தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருட்களின் இணைப்புகள், காணொளிகளைக் காண மீடியா, வி.எல்.சி., ரியல் ப்ளேயர்களின் இணைப்புகள், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் யூ.ஆர்.எல். இணைப்புகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எந்தெந்த தினத்தில் கிரிக்கெட் நடக்கிறதோ, அன்று விளையாடும் அணி குறித்த தகவல்களும், உடனுக்குடனான கிரிக்கெட் ஸ்கோர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

முக்கியமாய் வலைதள வாசிப்பாளர்களும் தங்களிடம் உள்ள புத்தகங்களையும், விடைத் தாள்களையும், கையேடுகளையும் இங்கே பதிவேற்றலாம். இதன் மூலம் எல்லோரும் அதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஊடகமாக இத்தளம் செயல்படுகிறது. அரசு வெளியிடும் அறிவிப்புகள், கல்வி சார்ந்த நீதிமன்ற ஆணைகள் அனைத்தும் உடனுக்குடன் பதிவேற்றப்படுவது இத்தளத்தின் முக்கிய அம்சமாகும்.

மொத்தத்தில் கணிப்பொறியையும், இணையத்தையும் ஆரம்ப நிலையில் கையாளத் தெரிந்தவர்களுக்கும், ஆசிரியர் பயிற்சி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும் ஆகச் சிறந்த வழிகாட்டியாக இந்த வலைதளம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Source……..க.சே. ரமணி பிரபா தேவி in http://www.tamil.thehindu.com

Natarajan

” ஹனுமான் பலமும் பாகவதர் பாரமும் …” !!!

ஜூன் 12 காஞ்சிப்பெரியவர் ஜெயந்தி

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!
கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார். போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து “ஜால்ராக்களையும்’
அழைத்து வந்திருந்தார்.

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி.
பேச்சின் இடையே அவ்வப்போது, “ம்ஹும்…ம்ஹும்…’ என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, “பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்… பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார்.

“”பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்…. ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல…. ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ….” என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார்.

இதைக் கண்ட பெரியவர், “”மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,” என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7480/#ixzz3XqoTQ97p

Source……www.periva.proboards.com

Natarajan

” பூமி பூஜை செய்த புண்ணியம் …”

ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்

“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா ”

என்று கேட்டார்.

பணக்காரக் குடும்பத்தினருக்கு, ஒரு நொடி ‘சப்’பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,

‘ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்’ , ‘ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்’

என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘செய்யப்படுகிறது’ என்றனர்.

ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.
‘யாரால் செய்யப்படுகிறது?’ என்று வினவினார்.

இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் ‘வேலைக்காரிதான்’ என்றாள் தனவானின் மனைவி.

மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்துவிட்டது!” என்றார்.

அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.

தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.

எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்வோமே…

மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்., மாடம்பக்கம்.சென்னை.

Read more: http://periva.proboards.com/thread/9027/#ixzz3XHGctChO

Source…….. http://www.periva.proboards.com

Natarajan

 

” படித்து ரசித்தது …” ” குடத்திலே கங்கை அடங்கும் ” !!!

சிலேடை விருந்து’ நூலிலிருந்து:

அகத்தியர், தன் கமண்டலத்தில் சமுத்திரத்தை அடக்கினார்; அது, அவரது தவ வலிமை.
காளமேகப் புலவர், குடத்திலே கங்கையை அடக்கிக் காட்டுகிறார். இது, அவரது தமிழ் வலிமை.
‘குடத்திலே கங்கை அடங்கும்…’ என்ற ஈற்றடி கொடுத்து, வெண்பா தருமாறு காளமேகத்திடம் கேட்டனர் மற்ற புலவர்கள்.
குடத்திலே, கங்கையை எப்படி அடக்குவது? காளமேகம், மறுநொடியே தம் தமிழ் மந்திரத்தால் அடக்கிக் காட்டினார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த ஈசன், சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.
பொருள்: விண், மண் மற்றும் மலை என்று எதற்கும் அடங்காத கங்கை, இறைவனின் சடாமுடியில் (சிவபெருமான் தலையில்) அடங்கியிருக்கிறது!

Source:::: http://www.dinamalar.com

Natarajan

” இதுவும் ஒரு புரியாத புதிரா ? …பதில் சொல்லு மனிதா …”

 

இந்த மண்ணில் எத்தனை  நாடு….  எத்தனை மனிதர் கூட்டம்
ஒவ்வொரு நாட்டுக்கும்  ஒரு எல்லைக்  கோடு வேறு !!!
மொழி எத்தனை …மனித  இனம் , மதம்  எத்தனை எத்தனை !!!
அத்தனையும் தாங்குகிறாள்   ஒரு தாய் … இந்த  பூமித் தாய் …
இந்த மண்ணை  விட்டு  விண்ணுலகம் செல்லும்  மனிதர் கூட்டம்
அத்தனை பேருக்கும் இருக்குமா  இடம்  விண்ணுலகில் ? …
இனம்  மொழி மதம்  பார்த்து இட ஒதுக்கீடும் கிடைக்குமா  அங்கே ?
புரியாத புதிர் இது… விடை  தெரியாத  கேள்வியும்  இது …பின்
இருக்கும் இடத்தில்  இன்று  ஏன்  இந்த ஆட்டம் …
ஒருவர் மேல் ஒருவர்  காட்டம் ? …இதுவும்
ஒரு புரியாத  புதிரா ? …பதில்  சொல்லு  மனிதா
ஒரு நிமிடம் யோசித்து …!!!
நடராஜன்
7ஏப்ரல் 2015