கல கல என்று கலக்கும் பொம்மை கொலு… நவராத்திரி திருவிழா !!!

ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.

இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின்  பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென  அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

kolu_2பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும்,  பரணிலிருக்கும்  பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா
வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய  பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில்  மட்டுமே சாத்தியம்.

இதையெல்லாம் விடுங்கள்.

பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

இது மட்டுமா.
நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.

kolu_4நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி
கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.

கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

 

SOURCE:::Vanisri Sivakumar in dinamani.com

Natarajan

” ஸ்வாமிதான் உன்னைக் காப்பாத்தி இருக்கார் …” !!!

Post Options
“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….
உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.

Featured Image -- 11217

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால்,அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம். பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி,

“இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட்

நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்?

அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே

உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம்.

ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன்.

மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன்.முடியவில்லை. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள்,

வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்!

Source:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8006#ixzz3E0NCEVew

” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

சென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை !!!

  • ருக்மணி அருண்டேல்
    ருக்மணி அருண்டேல்
  • டாக்டர் லஷ்மி
    டாக்டர் லஷ்மி
  • டி.பி.ராஜலட்சுமி
    டி.பி.ராஜலட்சுமி
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
    சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி
    எம்.எஸ்.சுப்புலட்சுமி

சென்னை தினம் கொண்டாடுகிற வேளையில் சமூக மாற்றத்துக்கான காரணகர்த்தாக்களாகவோ, ஏதோ ஒரு துறையில் களம்கண்ட காரிகைகளாகவோ இருந்த சென்னைப் பெண்களையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். அப்போதுதான் அந்தக் கொண்டாட்டம் முழுமை பெறும். அந்த வகையில் சமூகத்துக்குப் பங்காற்றிய பெண் ஆளுமைகள் பற்றிய தொகுப்பு:

டாக்டர் லக்ஷ்மி, குடும்ப நாவல்களின் முன்னோடி

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் என்ற ஊரில் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி திரிபுரசுந்தரியாகப் பிறந்தவர். இவர் எழுதுவதற்காக வைத்துக் கொண்ட புனைப்பெயர் ‘லக்ஷ்மி’. சிறு வயதில் இருந்து மருத்துவராகும் கனவைச் சுமந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கிய இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போதே கதைகளையும் எழுதத் தொடங்கினார்.

மருத்துவக் கல்விக்கு இனிமேலும் தன்னால் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு வரச் சொல்லியும் இருந்த தந்தையின் கடிதம் திரிபுரசுந்தரிக்கு வேதனையையும் திகைப்பையும் அளித்தது. அந்தச் சமயத்தில்தான் ஒரு அமெரிக்கச் செய்தித்தாள் நறுக்கு அவர் கண்ணில் பட்டது. அமெரிக்க மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தன் படிப்புக்காகக் காய்கறி லாரி ஒட்டிச் சம்பாதித்து அதில் வரும் வருவாயில் படித்து அறுவைசிகிச்சை நிபுணர் ஆனார் என்ற தகவல் அவரைப் பொறுத்தவரை திருப்புமுனையாக இருந்தது.

நாள்தோறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிராட்வே வழியாக டிராம் வண்டியில் பயணிக்கும்போது ஒரு நிறுத்தத்தில் ‘ஆனந்த விகடன்’ பெயர்ப் பலகை கொண்ட அலுவலகத்தைப் பார்த்திருந்த திரிபுரசுந்தரி, அதன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து உதவி கேட்க முடிவுசெய்தார். மறுநாளே ஒரு கதையை எழுதி வரச் சொன்னார் வாசன். இரவு முழுவதும் கண் விழித்து ‘தகுந்த தண்டனையா?’ என்ற சிறுகதையை எழுதி அளித்தார். அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் கல்கியைச் சந்தித்து ‘லக்ஷ்மி’ என்ற புனைப்பெயரையும் இட்டுக் கொடுத்தார்.

கதை பிரசுரமானது. ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அடுத்தடுத்து அவருக்கு உதவும் வகையில் ஒரு சிறுகதைக்கு 10 ரூபாய் வீதம் சன்மானம் அளிக்கப்பட்டது. அடுத்து ஒரு சிறு தொடர் எழுதவும் வாய்ப்பு வந்தது. அதற்குச் சன்மானம் ஐநூறு ரூபாய்.

மருத்துவராக ஆன பிறகு திரிபுரசுந்தரிக்கு அவரது எழுத்தே வாழ்க்கைத் துணையையும் அளித்தது. தாய்மை என்ற மருத்துவ நூலுக்காக விருது வாங்கச் சென்றபோது இலங்கையில் கண்ணபிரான் என்பவரைச் சந்தித்து அது திருமணமாகக் கனிந்தது.

சென்னையில் ஒரு டிராம் வண்டிப் பயணம் மூலம் தனது விதியையே மாற்றிக்கொண்ட குடும்பக் கதையாசிரியர் டாக்டர் லக்ஷ்மிக்கு ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசும் கிடைத்தது. இவர் 1987-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி காலமானார்.

சமைத்துப் பார் மீனாக்ஷி அம்மாள், சமையல் உலகின் ராணி

மெட்ராஸின் உணவு வரலாற்றில் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் எளிமையாகக் காணப்படும் 188-ம் எண் வீட்டுக்கு முக்கிய இடம் உண்டு. 70 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்ப் பெண்களின் கைவிளக்காக விளங்கிவரும் சமைத்துப் பார் புத்தகங்களின் நூலாசிரியர் மீனாக்ஷி அம்மாள் அங்கேதான் வாழ்ந்தார்.

ஒரு இளம் பெண் அடுப்பு முன்பிருந்து பானையைக் கிளறுவது போன்ற கோட்டுச் சித்திரம்தான் சமைத்துப் பார் புத்தகத்தின் அட்டைப்படம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு புதிதாகத் திருமணமாகி வெளியூர் செல்லும் அனைத்துப் புதுப்பெண்களும் தங்கள் மாமியாரையும், நாத்தனார்களையும் மனம் குளிர்விக்கப் பிரியமான தாயாகத் தன் புத்தகம் வழி உதவியிருக்கிறார் மீனாக்ஷி அம்மாள்.

பதின்ம வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. மூத்த மகன் பிறந்த இரண்டு வருடங்களிலேயே மீனாக்ஷி அம்மாளின் கணவர் இறந்துவிட்டார். இரண்டு வயது மகன், ஏழு வயது மைத்துனர், மாமியார் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்புகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகத்தை எழுதினார் மீனாக்ஷி அம்மாள்.

1951-ல் முதல் பதிப்புக் கண்ட சமைத்துப் பார் இதுவரை எண்ணற்ற பதிப்புகளைக் கண்டுவிட்டது. இப்புத்தகம் 1968-ல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் இதுவரை எழுதப்பட்ட சமையல் நூல்களில் மீனாக்ஷி அம்மாவை அடித்துக்கொள்ள இன்னும் யாரும் வரவில்லை.

ஒரு காலகட்டம்வரை சமையல் புத்தகம் சமையலறைகளில் ரகசியமான ஒன்றாகவே பெண்களால் பராமரிக்கப்பட்டது. சமைப்பதற்காக ஒரு புத்தகத்தின் துணையை நாடுவதை, அப்போதுள்ள குடும்பங்கள் விரும்பவில்லை. திருமணமாகும் வயது வந்த பெண் சமையல் திறனையும் இயற்கையாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அனைத்துத் தமிழ்ப் பெண்களுக்கும் மீனாக்ஷி மாமி ஒரு கேடயமாக மாறியிருந்தார் என்றால் ஆச்சரியமில்லை.

இப்போதும் ஐ.டி துறை சார்ந்து மேல்நாடுகளில் பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும், மணப்பெண்களுக்கும் இந்தப் புத்தகம் வரப் பிரசாதமாகவே உள்ளது.

நெருங்கிய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு, பெரிதாக இடமாற்றம் இல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்த நிலை மாறிய காலத்தில் எழுதப்பட்ட நூல் சமைத்துப் பார். கூட்டுக் குடும்பங்கள் சிறு குடும்பங்களாக மாறிய நிலையில் ‘சமைத்துப் பார்’ மீனாக்ஷி அம்மாள், எழுதியே லட்சாதிபதி ஆனார்.

டி.பி. ராஜலட்சுமி, தமிழ் சினிமாவின் தலைமகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் டி.பி. ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி அவருக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு துயருற்ற அவரது தந்தை மனம் வாடி மரணமுற்றார்.

ராஜலட்சுமி சிறு வயதிலேயே வறுமை வாட்டாமல் தன் விதவைத் தாயுடன் திருச்சி வந்தார். தன் தந்தை கற்றுக்கொடுத்த பாடலை ஒரு கோயிலுக்குச் சென்று மனமுருகப் பாடிப் பார்க்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. அந்தக் குரல்தான் அவருக்கு பின்னர் வாழ்வு தந்தது.

திருச்சியில் சி.எஸ். சாம்பண்ணா நாடகக் குழுவில் தாயும் மகளுமாகப் பணியில் சேர்ந்தனர். முதலில் ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடித்த ஆண்களுக்குப் பாடத் தொடங்கிய ராஜலட்சுமி, பவளக் கொடி நாடகத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக நடித்தார். நாடக உலகில் ஜொலித்த ராஜலட்சுமியை வெள்ளித்திரை அள்ளிக்கொண்டது. 1929-ம் ஆண்டு வெளிவந்த கோவலன் படத்தில் ராஜலட்சுமி அறிமுகமானார். 1931-ல் பேசும் படமாக வெளிவந்த காளிதாஸில் கதாநாயகியானார். அதில் அவர் பாடி, ஆடிய “மன்மத பாணமடா மாரில் பாயுதடா” பாடலைத் தமிழகமே கொண்டாடியது.

நடிகையாக வெற்றிபெற்ற ராஜலட்சுமி மதுரை வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. டி. பி. ராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1964-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, காற்றினிலே வரும் கீதம்

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் தன் 17 வயதில் முதல் முறையாக எம்.எஸ் பாடிய அனுபவம் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ள பெண் தன் தாய் பக்கவாட்டில் தம்புரா வாசிக்கப் பாடிய போது, அனுபவம் கொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள்கூட அந்தப் புதிய குரலை அற்புத உணர்வுடன் ரசித்துப் பாராட்டியதாக குறிப்பு உள்ளது. காரைக்குடி சாம்பசிவ ஐயர், எம்.எஸ்ஐப் பார்த்து, “குழந்தே, உனது குரலில் வீணை இருக்கிறது” என்றாராம்.

1916-ல் செப்டம்பர் 16-ம் தேதி சுப்ரமணிய அய்யருக்கும், சண்முகவடிவுக்கும் பிறந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. அவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர், அம்மா வீணைக் கலைஞர்.

1936-ல் திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சென்னை வந்தபோது, ஏற்கனவே நாடறிந்த பாடகியாகப் புகழ்பெற்றுவிட்டார். சேவா சதனம், மீரா உள்ளிட்ட படங்களில் பாடி நடித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளர் கல்கியின் நண்பருமான டி.சதாசிவத்தை 1940-ல் மணந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இசை சாதனைக்காக பாரத ரத்னா விருது பெற்றார். மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு எனப் பெரிய தலைவர்களை எல்லாம் வசீகரித்த குரல் அவருடையது.

சதாசிவத்தின் மரணத்துக்குப் பிறகு மேடைகளில் பாடாமலேயே இருந்த எம்.எஸ். 2004-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவச் சேவையுடன் மானுட சேவை

பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது இப்போதும் அரிதாக உள்ள சூழ்நிலையில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உண்மையான புரட்சிப் பெண்ணாக, சமூக மனுஷியாகப் பெரிய சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்தவர் முத்துலட்சுமி ரெட்டி.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, நன்றாகப் படித்ததால் உயர்நிலைப் பள்ளிவரை செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

மாணவர்கள் தேறுவதே அரிதாக இருந்த மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வெற்றிபெற்ற ஒரே மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். அதற்குப் பிறகு அவர் படிப்பதற்குத் தடைகள் உடைந்தன. 20 வயதில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் சமூகப் பணியிலேயே அவரது ஈடுபாடு இருந்தாலும் சகோதரிகளின் வாழ்வை உத்தேசித்துத் தன் மனமொத்த கணவராக டி.சுந்தர ரெட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் ஆனார். பின்னர் சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும் மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் இருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரத்தை நேரில் கண்ட முத்துலட்சுமி ரெட்டி, உடனடியாக சென்னையில் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். தனது நெருங்கிய உறவினர் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்ததைக் கண்டு அரசின் உதவிகூட இல்லாமல் நண்பர்களின் ஆதரவைப் பெற்றுச் சென்னை புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர் முத்துலட்சுமி ரெட்டி.

ஆங்கிலேய இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையையும், பால்ய மணத்தையும் ஒழிக்க பெரியார் ஈ.வே.ரா. மூவலூர் ராமாமிருதம் அம்மையாருடன் இணைந்து போராடினார். 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதளித்து இந்திய அரசு கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.

ருக்மிணி அருண்டேல், பல்துறைப் பேரொளி

ருக்மிணி தேவி 1904-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பொதுப் பணித்துறை பொறியாளராக இருந்த அவருடைய தந்தை, அன்னிபெசண்ட் அம்மையார் உருவாக்கிய தியசாபிகல் சொசைட்டியின் தீவிர உறுப்பினராகச் செயலாற்றியவர். தந்தையின் அறிமுகத்தால் ருக்மிணி தேவியிடம் சிறு வயதிலேயே அன்னிபெசண்ட் அம்மையாரின் தாக்கம் இருந்தது.

தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய வெள்ளையரான ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார்.

தியசாபிகல் சொசைட்டியின் இளைய மெய்ஞானிகள் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அருண்டேல் தம்பதியினர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து மெய்ஞானசபையின் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

லண்டனில் 1924-ம் ஆண்டு பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவிடம் ருக்மினி நடனம் கற்றுத் தேர்ந்தார். அப்போதுதான் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதக் கலையை நோக்கி ருக்மிணி அருண்டேலின் கவனத்தை அன்னா பாவ்லோ திருப்பினார்.

பரதம் என்பது கவுரவத்துக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படாத காலம் அது. அதனால், அதைச் சொல்லித்தரவும் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பரதக் கலை ஆசிரியர்களைத் தேடிப்பிடித்து பரதம் பயின்றார் ருக்மிணி.

கலாக்ஷேத்ரா உதயம்

மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் தனது முதல் அரங்கேற்றத்தை 1935-ல் நடத்தினார்.

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அடையாறில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது கணவருடன் இணைந்து தொடங்கினார்.

தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்துள்ளார். சென்னைக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமிருந்து மாணவர்கள் தங்கிப் பயிலும் கலைப் புகலிடமாக திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா திகழ்கிறது.

1956-ல் ருக்மிணி தேவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பதவி தேடிவந்தபோது, அது தன் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று இவர் மறுத்தார்.

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் !!!

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி’ என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது’ என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

– நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

Source::::The Hindu….Tamil
Natarajan

மதறாஸப்பட்டணத்துக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம் !!!

ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.

 

தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D’Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.

சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.

டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.

ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.

பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.

சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.

ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்’டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.

இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!

– ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Keywords: சென்னை, சென்னை 375, சென்னை விமான நிலையம், மதறாஸப்பட்டணம், மதறாஸ்

Source::::The Hindu…Tamil

Natarajan

டிகிரி இளைஞர்களின் டிகிரி காஃபி…!!!

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் உள்ள இளைஞர்கள் ரெஃப்ரஷ்மன்டுக்காக எப்போதாவது டிகிரி காஃபி குடிப்பார்கள். ஆனால், இந்த டிகிரி படித்த இளைஞர்கள் ‘டிகிரி காஃபி’ தயாரிப்பையே தங்கள் தொழிலாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜெயராமன் (27), குருநாதன்(27), வெற்றிச்செல்வன்(28) ஆகிய மூவரும் இன்ஜினீயரிங் முடித்துவிட்டுத் தங்கள் துறை சார்ந்த வேலையிலும் சேர்ந்தார்கள். ஆனால், ஒரு காலகட்டத்தில் வேலையை உதறிவிட்டு மூவரும் இணைந்து ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இதன் இரண்டு அங்கங்கள் காப்பி குடில், எக்ஸ்குளூசிவ்.

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், அதுவும் உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என எது உந்து சக்தியாக அமைந்தது. சொந்த தொழில் புரிவதில் உள்ள சவால்களும், சந்தோஷங்களும் என்ன? உங்களை இணைத்த மையப்புள்ளி எது? எதிர்கால திட்டம் பற்றிக் கூறவும் என அவர்களிடம் கேட்டபோது சுறுசுறுப்பாக சுடச்சுட தகவல்கள் பல அளித்தனர்.

‘‘நாங்கள் மூவருமே பள்ளிக்கூட சினேகிதர்கள். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக சேர்ந்து விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவோம். எங்கள் மூவருக்கும் பிடித்த பொதுவான விஷயம் காபி. நல்ல காபியைத் தேடி பலமுறை அலைந்திருக்கிறோம்.

ஆனால், பின்னாளில் வேலைக்குச் சென்ற பிறகு, எங்கள் பணியிடத்திற்கு அருகில் உள்ள காபி பாரிலேயே தான் காபி குடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்தக் கடையில் சுத்தம் பார்க்க முடியாது, சிகரெட் புகை இருக்கிறதே என சுகாதாரம் பேண முடியாது. இதுபற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். அப்போதுதான் நாம் மூவரும் இணைந்து ஏன் காஃபி ஷாப் ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது.

‘ரெஃப்ரஷ்மன்ட்’

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் நிறைய மெனக்கிடுதல் இருந்தது. ஒரு சர்வே செய்தோம், நீங்கள் ரெஃப்ரஷ்மன்ட்டுக்காக என்ன குடிக்க விரும்புவீர்கள் எனக் கேட்டபோது 95% பேர் நல்ல காபி எனப் பதிலளித்தனர்.

சரியான பாதையிலேயே செல்கிறோம் எனக் களத்தில் இறங்கினோம். முதல் அவுட்லெட்டைத் தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கினோம். இப்போது சென்னை, ஈரோடு, கொல்கத்தா என மொத்தம் 7 கிளைகள் இருக்கின்றன.

உடல்நலன் முக்கியம்

நாங்கள் காபி ஷாப் ஆரம்பிக்கும் போதே அது மேற்கத்திய காபி ஷாப் போல இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தோம். அதற்கேற்பவே, சுக்கு காப்பி, பனங்கற்கண்டு பால், கிரீன் டீ என உடல்நலத்திற்குச் சிறந்த பானங்களைத் தேர்வு செய்தோம்.

எங்களது அவுட்லெட்டுகள் கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகளில் இருக்கின்றன. இளைஞர்கள் இந்த ஹெல்த் டிரிங்கை மிகவும் ரசிக்கின்றனர். இன்னொரு முக்கிய விஷயம், மற்ற டீ ஸ்டால்களைப் போல் எங்கள் காபி குடிலில் நாங்கள் புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதில்லை என்றார் ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ இயக்குநர் ஜெயராமன்.

இதேபோல், குறைந்த விலையில் சத்தான உணவு என்ன வழங்கலாம் என்று யோசித்தபோது விளைந்ததே ‘எக்ஸ்குளூசிவ்’ கான்செப்ட். முட்டையை வைத்துக்கொண்டு 30-க்கும் மேலான வெரைட்டி தருகிறோம்.

ஒவ்வொரு சின்ன ரெஃப்ரஷ்மன்ட்டும் ரியல் ரெஃப்ரஷ்மன்ட்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்க்கையில் இப்படிப்பட்ட சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குச் சாதகமான தொழிலாக மாற்றிக்கொண்டோம்.

காபி குடில் நல்ல வரவேற்பு பெற்று 100 கிளைகளாவது தொடங்க வேண்டும். நிறைய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். இதுவே எங்கள் இலக்கு’’, என்கிறார்கள். அவர்கள் பேச்சில் டிகிரி காபிக்கு இணையான திடமும், சுவையும் இருந்தன.

“பசுமையின் மறு பெயர் சென்னை …” !!!

  • திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
    திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
  • புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
    புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
  • புளியந்தோப்பு
    புளியந்தோப்பு

இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.

வரலாறு, பண்பாடு

“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.

ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.

காரணப் பெயர்கள்

அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).

ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.

செழிப்பின் அடையாளம்

“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.

இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.

இன்றைய நிலை

“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.

ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.

இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.

பெயர்

காரணம்

திருவல்லிக்கேணி

திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்)

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை

புரசைவாக்கம்

புரச மரங்கள் நிறைந்த பகுதி

வேப்பேரி

வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி

புளியந்தோப்பு

புளிய மரங்கள் நிறைந்த தோப்பு

பனையூர்

பனை மரங்கள் நிறைந்த ஊர்

அத்திப்பேட்டை

அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை

பூந்தமல்லி

பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை

பெரம்பூர்

மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர்

ஆலந்தூர்

ஆலமரங்கள் கொண்ட ஊர்

திருவாலங்காடு

திரு+ஆலம்+காடு

இரும்புலியூர்

இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே)

திருவேற்காடு

வேல மரங்களால் நிறைந்த காடு

மாங்காடு

மாமரங்களால் நிறைந்த காடு

திருமுல்லைவாயல்

முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி

‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன