படித்து நெகிழ்ந்தது …”திருவள்ளுவரின் நாலு அடி பாடல் …” !!!

 

இப்படியும் ஒரு மனைவி இருந்திருக்கிறாளா..?
பல நூறு ஆண்டுகளுக்கு முன்…ஒரு புலவரின் மனைவி… இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம் …
என்னவென்று கேட்டு , கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர…மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் …
“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்..ஆனால்..ஒரே ஒரு கேள்வி ..என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு , என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை…இப்போதாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க…அந்த மனைவி கேட்டாளாம் இப்படி:
“இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு , இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்…நிம்மதியாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”
கணவன் மௌனமாக தலையசைத்து சம்மதம் தெரிவிக்க …மனைவி தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டு விட்டாளாம்..
“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள்…அப்படித்தானே..?”
கணவன் இதற்கும் மௌனமாக தலையசைக்க , மனைவி கேட்டாளாம் ..”இதுவரை அதற்கான காரணத்தை ஒருபோதும் நான் உங்களிடம் கேட்டதில்லை… காரணம்..கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி , நான் அறிந்ததில்லை… இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன்…இப்போதாவது சொல்லுங்கள்.. அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”
இதைக் கேட்டுவிட்டு , இதற்கான பதிலை எதிர்பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க , அந்தக் கணவன் சொன்னாராம்.. “ அது வேறொன்றும் இல்லை… பரிமாறும்போது தவறுதலாக சோற்றுப்பருக்கை கீழே சிந்தி விட்டால் , அதை அந்த ஊசியில் குத்தி , கொட்டாங்குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் கொட்டங்கச்சி நீரும்..ஊசியும்..”
கணவன் பதில் சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை…அவள் கேட்டாள் .. “ஆனால் ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும் , கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”
மனைவி இப்படிக் கேட்டதும்…குரல் உடைந்து போன கணவன்…குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்… “ உண்மைதான்…ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை..!
ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது , ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே….!”
கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய்தாளாம்…. அவ்வளவுதான்…! போய் விட்டாளாம்..!!
நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன் ..அந்தப் புலவன்…கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம் …
இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் …இரண்டு வரிப் பாடல்கள்…அதில் ஏழே ஏழு வார்த்தைகள்..! அவ்வளவுதான்…அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட பார்முலா..விதி..!
இப்போது…. தனது செய்யுள் விதியை…தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்… தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம்…அந்த நாலு வரிப் பாடல்:
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”
# ஆம்… இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் ..திருவள்ளுவர்….!
கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி ..வாசுகி…!
அந்தப் பாடலின் பொருள் :
“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”
# இன்னொரு வள்ளுவன் எதிர்காலத்தில் பிறக்கலாம்…!


ஆனால்..இன்னொரு வாசுகி….?

Source…..Facebook post of Sridharan Sivaraman

Natarajan

படித்து ரசித்தது …” பன்னீர் இலை விபூதி …” !!!

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :
திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்….
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம்இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
“அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”
பொருள்
“தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.”
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் ‘பத்ர பூதி’ என்பது என்ன?
விபூதியின் வரலாறு
‘பத்ர’ என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
“என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்” என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
“இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்”
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
“ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று…”
என்று பாடுகிறார். நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

 Source….Facebook post of Sridharan Sivaraman
Natarajan

” கிழவியும் குழவியும் …” அவ்வையார் ….பிள்ளையார் …!!!

 

pillaiyar-avvaiyaar

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Great messages on Vinayagar by Maha Periyava from Vol. 2 of Deivathin Kural. Let’s enjoy these messages during Vinayaka Chaturthi time.
Thanks to Shri S.A. Ramakrishnan and Shri Balaji Venugopal for the translation. Ram Ram
கிழ‌வியும் குழ‌வியும்
கிழப் பாட்டி ஒருத்தி. பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு இருந்த இடத்திலேயே கிடப்பவள். ஆனால் இந்தப் பாட்டி அப்படி இல்லை. இவள் நின்ற இடத்தில் நிற்காமல் இந்தத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்தாள். ஒரு குக்கிராமம் பாக்கியில்லாமல் ஊர் ஊராக, தெருத் தெருவாக ஓடிக்கொண்டேயிருந்தாள். அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு உற்சாக சக்தி இருந்தது. பாட்டி விஷயம் இப்படி இருக்கட்டும்.
குழந்தை ஒன்று. ‘கஷுக் முஷுக்’ என்று நல்ல ஆரோக்கியமாக இருக்கிற குழந்தை அது. குழந்தை என்றால் பொதுவாக என்ன பண்ணும்? துள்ளி விளையாடும். ஒரு க்ஷணம்கூட இருந்த இடத்தில் இருக்காமல் ‘துரு துரு’ என்று ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் இந்தக் குழந்தை இதற்கு நேர்மாறுதல். உட்கார்ந்த இடத்தைவிட்டு அது அசைவதில்லை.
வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை! குழந்தை மாதிரி பாட்டி ஓடிக் கொண்டிருக்கிறாள். பாட்டி மாதிரி குழந்தை இருந்த இடத்தைவிட்டு நகராமல் உட்கார்ந்திருக்கிற‌து.
ஆனால் அந்த‌ப் பாட்டி த‌ள்ளாத‌ வய‌சிலும் அத்த‌னை உற்சாகத்தோடு ஓடி ஆடிக் கொண்டிருந்ததற்கு இந்தக் குழந்தைதான் கார‌ண‌ம். இந்த‌க் குழந்தை கொடுத்த‌ ச‌க்தியினால்தான் அவ‌ள் அவ்வ‌ள‌வு காரிய‌ம் செய்தாள்.
இந்த‌ப் பிள்ளை யார்?
“பிள்ளை” என்றாலே அவ‌ர்தான். ம‌ரியாதையாக‌ப் “பிள்ளையார்” என்கிறோமே, அவ‌ர்தான் அந்த‌க் குழ‌ந்தை. யாராவ‌து ஒருத்த‌ர் இட‌த்தைவிட்டு ந‌க‌ராம‌ல் இருந்தால் ‘க‌ல்லுப் பிள்ளையார் மாதிரி” என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம்!
ச‌க‌ல‌ உல‌கங்க‌ளுக்கும் தாய் த‌ந்தையான‌ பார்வ‌தி ப‌ர‌மேச்வ‌ர‌ர்க‌ளின் மூத்த‌ பிள்ளை அவ‌ர். அத‌னால்தான் த‌மிழ் நாட்டில் அவ‌ரைப் “பிள்ளையார்” என்று சொல்கிறோம்.
ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் இவ‌ரை க‌ணேஷ் (க‌ணேச‌ர்), க‌ண‌ப‌தி என்பார்க‌ள். சிவ‌பெருமானின் ப‌டைக‌ளுக்கு, பூதகணங்களுக்கெல்லாம் பிள்ளையார்தான் தலைவர், ஈச‌ர், ப‌தி. அதனால் க‌ணேச‌ர், க‌ண‌ப‌தி என்று பெய‌ர். இவ‌ருக்கு மேலே த‌லைவ‌ர் யாரும் கிடையாது. எல்லாவ‌ற்றுக்கும் முந்திய‌வ‌ராக‌, முத‌ல்வ‌ராக‌, மேலாக‌ இருப்ப‌வ‌ர் அவர். அவ‌ருக்கு மேலே இன்னொரு த‌லைவ‌ர் (நாய‌கர்) இல்லை. அத‌னால் ‘விநாய‌க‌ர்’ என்றும் பெய‌ர். ‘வி’ என்ப‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒன்றை உய‌ர்த்திக் காட்டுவ‌த‌ற்கும் சில‌ சம‌ய‌ங்க‌ளில் ஒன்றுக்கு எதிர்ம‌றையான‌தைக் (opposite) குறிப்பிட‌வும் வார்த்தைக்கு முத‌லில் வ‌ரும். இங்கே “நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர்” என்று எதிர்ம‌றையாக‌ வ‌ருகிற‌து. த‌ம‌க்குமேல் ஒரு நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர் என்று அர்த்த‌ம்.
அவ‌ர் செய்யாத‌ அநுக்கிர‌ஹ‌ம் இல்லை. குறிப்பாக‌, ந‌மக்கு வ‌ருகிற‌ விக்கின‌ங்க‌ளை எல்லாம் அழிக்கிற‌வ‌ர் அவ‌ர்தான். ஆகையால் ‘விக்நேச்வ‌ர‌ர்’ என்றும் அவ‌ரை சொல்கிறோம். எந்த‌ காரிய‌த்துக்கும் த‌டை வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்காக‌வே முத‌லில் இவ‌ரை பிரார்த்திக்கிறோம். முத‌ல் பூஜை இவ‌ருக்குத்தான்.
க‌ஜ‌முக‌ன், க‌ஜ‌ராஜ‌ன் இப்ப‌டியெல்லாம் அவருக்குப் பெய‌ர் இருக்கிற‌து. யானை முக‌த்தோடு அவ‌ர் விள‌ங்குவ‌தால் இந்தப் பெய‌ர்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌.
யானைக்குத் தேக‌ப‌ல‌ம் மிக‌வும் அதிக‌ம். ஆனாலும் அது சிங்க‌ம், புலி போல் ம‌ற்ற‌ப் பிராணிக‌ளை ஹிம்சிப்ப‌தில்லை. ப‌ர்மா, ம‌லையாள‌ம் மாதிரி இட‌ங்க‌ளில் ஜ‌ன‌ங்க‌ளுக்காக‌ யானைக‌ள் தான் பெரிய‌ பெரிய‌ காரிய‌ங்க‌ளைச் செய்கின்ற‌ன‌. பிள்ளையாரும் இப்ப‌டித்தான் ரொம்ப‌ ச‌க்திவாய்ந்த‌வ‌ர்; ஆனாலும் அதைக் காட்டிக் கெடுத‌ல் செய்யாம‌ல் ந‌ம‌க்கெல்லாம் ந‌ன்மையே செய்துகொண்டிருப்பார். யானைக்கு புத்திகூர்மை, ஞாப‌க‌ச‌க்தி எல்லாம் மிக அதிக‌ம். பிள்ளையார் அறிவே வ‌டிவான‌வ‌ர்.
யானை என்ன‌ செய்தாலும் அழ‌காயிருக்கிற‌து. அது அசக்கி அச‌க்கி ந‌ட‌ப்ப‌து, சாப்பிடுவ‌து, காதை ஆட்டுவ‌து, தும்பிக்கையைத் தூக்குவ‌து – எல்லாமே பார்க்க‌ ஆன‌ந்த‌மாயிருக்கிற‌து. அத‌ன் முகத்தைப் பார்த்தாலே ப‌ர‌ம‌ சாந்தமாக இருக்கிற‌து. சின்ன‌ க‌ண்க‌ளான‌லும், அமைதியாக‌, அன்பாக‌ இருக்கின்ற‌ன‌. மிருக‌ வ‌ர்க்கத்தில் நாம் பார்த்துக்கொண்டேயிருப்ப‌து யானையைத்தான்.
ம‌னித‌வ‌ர்க்க‌த்தில் குழ‌ந்தை என்றால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து. கெட்ட‌ எண்ண‌மே இல்லாதது குழ‌ந்தை. ஆன‌ந்த‌மாக‌ விளையாடிக்கொண்டு இருப்ப‌து குழ‌ந்தை. அதைப் பார்த்தாலே நம‌க்கும் ஸந்தோஷ‌மாக‌ இருக்கிற‌து.
பிள்ளையார் யானைக்கு யானை; குழ‌ந்தைக்குக் குழ‌ந்தை. அதனால் அவ‌ரை எத்த‌னை பார்த்தாலும் போதும் என்ற‌ திருப்தி உண்டாவ‌தில்லை. க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் இல்லாத‌ குழ‌ந்தை ம‌னசு அவ‌ருக்கு. குழ‌ந்தை போல் ந‌ல்ல‌ உள்ள‌ம்; யானை மாதிரி தேக‌ பல‌ம், புத்தி கூர்மை; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ தெவிட்டாத‌ அழ‌கு; ஆன‌ந்த‌ம் பொங்கிக் கொண்டிருக்கிற‌ ரூபம்.
சேராத‌தெல்லாம் அவ‌ரிட‌ம் ஸ்வபாவமாக‌ச் சேருகிற‌து. க‌ழுத்துக்கு கீழே குழ‌ந்தை; ம‌னித‌வ‌ர்க்க‌ம். மேலே முக‌ம் யானை; மிருக‌வ‌ர்க்க‌ம். ஆனால், அவ‌ர் வாஸ்த‌வ‌த்தில் தேவ‌வ‌ர்க்க‌ம். தேவ‌ர்க‌ளுக்குள் முத‌ல் பூஜை பெறும் தெய்வ‌மாக‌ இருக்கிறார்.
குழ‌ந்தையாக‌ இருந்துகொண்டே மஹா பெரிய‌ த‌த்வ‌ங்க‌ளுக்கு ரூப‌கமாக‌ (Personification) இருக்கிற‌ பிள்ளையாரிட‌ம் ப‌ல‌ தினுசான‌ மாறுபாடுக‌ள் (Contrasts). இதிலே ஓர் அழ‌கு. வித்தியாச‌மான‌தெல்லாம் அவ‌ரிட‌ம் சேர்ந்திருப்பதாலேயே அவ‌ரிட‌ம் எல்லாம் ஐக்கிய‌ம் என்றாகிற‌து. உதார‌ண‌மாக‌, ஒரு கையில் ஒடிந்த‌ த‌ந்த‌ம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்க‌ட்டை வைத்திருக்கிறார். அத‌ற்குள் தித்திப்பாக‌ இருக்கிற‌ வ‌ஸ்துவுக்குப் பெய‌ர் பூர்ண‌ம். பூர்ண‌ம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற‌ த‌ந்த‌ம் மூளி; இன்னொன்றிலோ முழுமை. எல்லாம் நிறைந்த‌ பூர‌ண‌ப் பொருள் பிள்ளையாரேதான். இதை அறிந்துகொள்வ‌துதான் பேரான‌ந்த‌ம். ஆன‌ந்த‌த்திற்கு இன்னொரு பேர் மோத‌ம், மோத‌க‌ம். கொழுக்க‌ட்டைக்கும் மோத‌க‌ம் என்றே பெய‌ர்.
இன்னொரு மாறுபாடு: பிள்ளையார் குழ‌ந்தை. அத‌னால் பிர‌ம்ம‌ச்சாரி. ஆனால் இவ‌ர் யானையாக‌ வ‌ந்து வ‌ள்ளியை விர‌ட்டிய‌தால்தான் அவ‌ள் ஸுப்ரம்ம‌ண்ய‌ ஸ்வாமியை க‌ல்யாண‌ம் செய்துகொண்டாள்! இன்றைக்கும் க‌ல்யாண‌ம் ஆக‌வேண்டுமானால் இந்த‌ க‌ட்டைப் பிர‌ம்ம‌ச்சாரியை வேண்டிக்கொள்கிறார்க‌ள். இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? அவ‌ர் இருக்கிற‌ நிலையில் அவ‌ருக்கு வேண்டாத‌தையெல்லாம் கூட‌, அவ‌ர் நிலைக்கு மாறாக‌ இருக்கிற‌ ந‌ம‌க்குப் ப‌ர‌ம‌ க‌ருணையோடு கொடுத்துக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தூக்கிவிடுக்கிறார்.
‘க‌ல்லுப் பிள்ளையார்’ என்ப‌த‌ற்கேற்கத் தாம் உட்கார்ந்த‌ இட‌த்தைவிட்டு அசையாம‌லே இருந்தாலும் ப‌க்த‌ர்க‌ளை ஒரே தூக்காக‌ தூக்கி உச்ச‌த்தில் சேர்த்து விடுவார். அவ்வையாரை இப்ப‌டிததான் க‌டைசியில், தாம் இருக்கிற‌ இட‌த்திலிருந்தே தும்பிக்கையால் ஒரு தூக்குத் தூக்கி கைலாஸத்திலேயே கொண்டு சேர்த்து விட்டார்!
பிள்ளையாரைப் பார்க்க‌ப் பார்க்க‌ ந‌ம‌க்கு மேலே மேலே இப்ப‌டிப் ப‌ல‌ த‌த்துவ‌ம் தோன்றுகிற‌து. இதுவும் ந‌ம் அறிவின் அள‌வுக்கு எவ்வ‌ள‌வு எட்டுகிற‌தோ அவ்வ‌ள‌வுதான். வாஸ்த‌வ‌த்தில் ந‌ம‌க்குத் தெரிவ‌த‌ற்கும் அதிக‌மாக‌, அவ‌ரிட‌ம் பெருமைக‌ள் அள‌விட‌ முடியாம‌ல் இருக்கின்ற‌ன‌.
‘குழ‌ந்தையும் தெய்வ‌மும் கொண்டாடும் இட‌த்திலே’ என்பார்க‌ள். தெய்வ‌மே குழ‌ந்தையாக‌ வ‌ந்துவிட்ட‌து பிள்ளையாரில். அத‌னால் குழ‌ந்தை ஸ்வாமியாக‌க் கொண்டாடுகின்ற‌ த‌மிழ்நாட்டில், ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாம‌ல் எங்கு பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவ‌ர் செய்த‌ அநுக்கிர‌ஹ‌த்தினால்தான் அந்த‌ப் பாட்டி தமிழ் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாள்.
அந்த‌ப் பாட்டி யார் என்றால், அவ‌ள்தான் அவ்வையார்.     பிள்ளையார் – அவ்வையார்.!
Source….Input from a friend of mine
natarajan

வாரம் ஒரு கவிதை …” வான மழை நீ எனக்கு …” !!!

 

 
My Tamil kavithai in http://www.dinamani.com  on 29th august 2016
Natarajan

சென்னை டா! …. இது நம்ம சென்னை டா!!!!

chennai day

கி.பி. 1639 ல் இதே ஆகஸ்டு 22 ஆம் நாள் தான் பிரான்சிஸ் டே  மதராஸபட்டினத்தை விஜயநகர மன்னரின் ஆளுகையின் கீழிருந்த வந்தவாசி பகுதியின் பிரதிநிதி  தாமர்ல வேங்கடபதியிடம் இருந்து சொற்பத்  தொகைக்கு விலைக்கு வாங்கினார். சென்னைப்பட்டினம் விலைக்கு வாங்கப் பட்ட அந்த நாளை  ஒட்டி  அடிப்படையில் சென்னைவாசியான பத்திரிகையாளர் வின்சென்ட் டிசோசா மற்றும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா இருவரது முயற்சியால் ‘சென்னை ஹெரிடேஜ் பவுண்டேஷன்’ மூலமாக 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 ஆம் நாள் ’சென்னை டே’ வாக அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு வருடமும் ’சென்னை டே’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் சென்னை மக்கள் ‘சென்னை டே’ வைத் தங்களுக்குப் பிடித்தமான விதவிதமான வகைகளில் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். சென்னைக்குள் கொண்டாட சென்னையைக் கொண்டாட விஷயங்களா இல்லை?! ஒன்றா இரண்டா நினைத்து நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்!

50 களின் பழைய ஓரணா நாணயங்கள் முதல் 60 களின் கிராமஃபோன் ரிகார்டுகள், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் சென்னை கார்ப்பரேஷன் ரிப்பன் மாளிகை, இன்றும் பழமை விரும்பிகளின் புராதன சேகரிப்பில் பெருமிதம் காட்டும் கிரஹாம்பெல் காலத்திய கையால் சுழற்றப்படும் டயல் டெலிபோன்கள், காசிமேட்டின் கட்டுமரங்கள்,மோட்டார் போட்டுகள், சென்னை வாழ் மக்களின் சந்தோசம், துக்கம், வருத்தம், கொண்டாட்டம் அனைத்துக்கும் தோன்றாத்துணை நிற்கும் ஈடு இணையற்ற மெரினா பீச், சற்று முரட்டுத்தனமாக தோற்றமிருப்பினும் பெரும்பாலும் நட்பு முகம் காட்டும்  சென்னை ஆட்டோக்காரர்கள், ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் சென்னைத் தெருக்களை நிரப்பி அவசர அவசரமாக சைக்கிளிலிருந்தவாறு  செய்தித்தாள்களை விசிறியடித்துச் செல்லும் பேப்பர் பையன்கள், சரவண பவன் சாம்பர் இட்லி, நெய் ரோஸ்ட்,  கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர் பாகு அடடா  சொல்லித் தீராது இன்னுமிருக்கிறது!

மக்கள் கூடும் இடமெங்கும் குளுமையாய்  கடை விரிக்கும்  இளநீர் வியாபாரிகள், சுடச் சுட ஃபில்டர் காப்பி, இனிக்க இனிக்க கரும்பு ஜூஸ், நினைவுகளை கிளறிச் செல்லும் அண்ணா மேம்பாலம், ஜெமினி மேம்பாலம், சதா காதோடு உரசியவறு கதை பேசிக் கடக்கும் எலக்ட்ரிக் டிரெயின் சகட ஓசைகள், அத்தனைக்கும் அப்பால் என்றென்றைக்கும் சென்னைக்கு அதன் உயிர்ப்பான வண்ணம் அளிக்கத் தயங்காத குடிசை மாற்று வாரிய பகுதிகளின் குஷியான குழந்தைப் பட்டாளங்கள்.

இன்னும்…இன்னும் இன்னுமிருக்கிறதே சொல்ல… சென்னைச் சாலைகளின் மீன்பாடி வண்டிகள், இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் இங்கே பிழைப்பிற்காக வந்தாலும் தமது மரபை விடாது தினுசு தினுசாக தலைப்பாகை கட்டிய பல இனத்து இளையவர்கள், முதியவர்கள், எப்போதும் ஜனங்களின் சல சலப்பில் திருவிழா மூடில் கல கலக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு, வெளிநாட்டினரும் வந்து கைகளால் பிசைந்து அள்ளி உண்வருந்த விரும்பும் திருவல்லிகேணி காசி விநாயகா மெஸ், பூ கட்டும் வித்தை கற்க விரும்பும் மயிலை கபாலி கோயில், இன்றைக்கு இடிக்கப்பட்டு விட்டாலும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக எப்போதும் மக்களின் மனதில் மறவாது இடம் பிடிக்கும் கடற்கரை சீரணி அரங்கம். எல்.ஐ.சி கட்டிடம், சாந்தோம் சர்ச்… கடவுளே!

லிஸ்ட் இன்னும் முடிந்தபாடில்லை சென்னை என்றதும் பழமையும் புதுமையாக நம் மனம் நிறைக்கும் ஞாபகங்கள் தான் எத்தனை எத்தனை?! சென்னை வாழ் மக்களுக்கும் சரி இங்கே வந்து செல்லும் அயல் மாநிலத்து  அல்லது அயல் நாட்டு விருந்தினர்களுக்கும் சரி சென்னை எப்போதும்  தன் கலாச்சார அடையாளங்களை இழக்க விரும்பாத அதே சமயம் புதுமைகளையும் பெருமிதத்தோடு  அரவணைத்துக் கொள்ளும் நவ நாகரீக யுவதியாகவே காட்சியளிக்கிறது. இந்த நகரத்துக்குள் ஒரு முறையேனும்  வந்து போன ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளன்போடு கூடிய தோழமையை, இதுவும் எனது சொந்த வீடென எண்ணிக் கொள்ளும் நெருக்கத்தை இந்த நகரம் தன் இரு கரங்களிலும் அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது என்பதற்கு நீடித்த சாட்சியங்களாக நிற்பவை தான் மேலே சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும். அதனால் மட்டுமே கடும் போக்குவரத்து நெரிசல், சுழற்றி அடித்த சுனாமி, மீட்டெடுக்க முடியாத மழைக்கால கோர இழப்புகள் போன்ற சென்னையின் சில விரும்பத் தகாத அம்சங்களையும் கூட மக்கள் சகித்துக் கொள்ளப் பழகி விட்டனர். அந்தக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படுமானால் சென்னை எப்போதும் சிங்காரச் சென்னை தான். கபாலி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் “இது சென்னை டா! நம்ம சென்னை டா” .

சென்னையின் பல்வேறு வண்ணம் காண  கீழே உள்ள வீடியோ இணைப்புகளை கிளிக்குங்கள்…

சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தில் வரும் பாட்டி சொல்வது போல குளிக்க, துவைக்க, சாப்பிட, சுத்தம் செய்ய என  எல்லா வேலைகளுக்கும் இந்தியர்களான  நாம் நமது கைகளையே பயன்படுத்துகிறோம், இது வெளிநாட்டினருக்கு எப்போதும் ஆச்சர்யம் தரும் விசயம். கீழே உள்ள வீடியோ இணைப்பில் சென்னை டே வை முன்னிட்டு திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ்ஸில்  வெளிநாட்டுக் குடும்பம் ஒன்று நமது இந்தியச் சாப்பாட்டை கைகளால்  பிசைந்து ரசித்து ருசித்து உண்பதைப் பாருங்கள்.

மயிலை கபாலி கோயிலில் பூ கட்ட கற்றுக் கொள்ளும் வெளிநாட்டுப் பெண்.

 

Source….By கார்த்திகா வாசுதேவன்  in  www.dinamani.com

Natarajan

Madras Day 2016…. !!!

 

Source….you tube    ….Gaananjali’s music band Opus G7 has done the Madras song (Chennai song) which was selected by The Hindu group.

The music is composed and performed by Opus G7.

Natarajan

வாரம் ஒரு கவிதை …” எதிர் கால கனவு ” !!!

 

எதிர்கால  கனவு
……………
குழந்தை பிறந்த நிமிடம் முதல் அம்மா அப்பாவுக்கு  கனவு
அவர் பிள்ளையின் எதிர்காலம் !
கனவு பல கண்டு வளரும் பிள்ளை உனக்கும்    அந்த  கனவுதான்
அஸ்திவாரம் நீ  கட்டும் உன்  வாழ்க்கை வீட்டுக்கு …உன் நாட்டுக்கு !
கனவு  பல  இருக்கலாம் ..ஆனால்  அது உன் தூக்கத்தில்
வரும்  கனவு அல்ல தம்பி… உன்னை  தூங்க விடாமல் உன்னை
துரத்தும்  உன் லட்சியக் கனவாக மட்டுமே இருக்கலாம்  தம்பி !
கனவிலும்  உன் சிந்தனை இருக்கலாம் …சிந்தித்து சிந்தித்து
உன் லட்சியம் எட்ட நீ  ஏறும் ஏணியாக உன் கனவு இருக்கலாம் !
முடியாத செயலை முடிக்க வேண்டும் என்று  கனவு இருக்கலாம் !
இதை  நான் சொல்லவில்லை  தம்பி !…அந்த மாமனிதன்
கலாம்  சொன்னது  உனக்கு !.. மறக்க வேண்டாம் நீ   அந்த
மாமனிதனின்  மணி மொழி ! அவன் சொல் வழி நீ  நடந்து
மாற்றிக் காட்டு உன் தாய் நாட்டை ஒரு புதிய பாரதமாக !
“இருபது இருபது …பாரதம் ஒரு வல்லரசு” …இதுவே உன்
 கனவாகட்டும் …உன் கனவு  நனவாகும் அந்த நாள்
மாமனிதன் கலாம் கண்ட கனவும்  நனவாகும்  பொன்னாள் !
Natarajan……My kavithai in http://www.dinamani.com  on 22 august 2o16

வாரம் ஒரு கவிதை …” வயல் வெளிகளில் ” !

 

”  வயல்  வெளிகளில் “
……………………..
வயல் வெளியில் முத்து முத்தாக அவன் சிந்தும் வியர்வை
நெல் மணியாக மலரும் நாள்  உழவன் அவனுக்கு  திருநாள் !
ஒரு நாள் திருநாளுக்கு   அவன் படும் பாடு வெளியில்
தெரிவது எத்தனை பேருக்கு ?
உழைப்புக்கு ஏற்ற ஊதியம்   கேட்டு உள்ளிருப்பு
போராட்டம் ,அலுவலக புல்வெளியில் அமர்ந்து !
விண்ணைத்  தொடும் விலைவாசிக்கு இணையாக ஊதியப்
படி கேட்டு “கேட்” மீட்டிங் மற்றும் சாலை வழி மறியல் ! ஆனால்
சேற்றில் கால் வைத்து நாற்று நாடும் உழவனின்
உழைப்பின்  மதிப்பு ….அவனுக்கே தெரியாத  ஒரு கணக்கு !
மண்ணையும் ,தன்னையும்  நம்பும்  விவசாயிக்கு மட்டும்
ஏன் தனி  கணக்கு  அவன் நமக்கு அளிக்கும் நெல் மணிக்கு ?
இரவும் பகலும் உழைக்கும் அவனுக்கும்  வேண்டாமா  அவன்
உழைப்புக்கு சரியான ஒரு ஊதியம் ?  யோசிக்க வேண்டும்
நாம் … வயல் வெளி விவசாயம் அவன் மறந்தால் ,  யாசிக்க
வேண்டும் நாம் நம் உணவை வேறு நாட்டிடம் !
விண்வெளியில் சோதனை பல செய்து சாதனை படைக்கும்
  நாம் ,நம் வயல் வெளியிலும்  சாதித்து காட்ட வேண்டாமா ?
விண்ணைத் தொட்டு  மாற்று கோளிலும் கால் வைக்க
முந்தும்  நாம் நம் மண்ணை பொன்னாக்கும் நுண்ணியல்
விஞ்ஞான அறிவியலை நம்  வயல் வெளியெங்கும்
விதைத்து வளர்க்க முடியாதா என்ன ?
காட்டுவோம் ஒரு நல்ல வழி  நம் வயல் வெளிக்கும் ! செய்து
காட்டுவோம் ஒரு பசுமை தொழில் புரட்சி !  உழவும்  ஒரு  தொழில்
ஆகி நம் உழவனும் பல உழவுத்  தொழிலாளிகளை உருவாக்கட்டும் !
Natarajan
My Kavithai appeared  in http://www.dinamani.com on 8th august 2016

படித்து ரசித்த கவிதை…” புறங்கூற்று ” !

புறங்கூற்று…

………………….
* குற்றம் சொல்லவும்
குறைகள் பேசவும்
முற்றம் தேவையில்லை
இவர்களுக்கு!

* வென்றவனைக் கண்டால்
அதிர்ஷ்டம் என்று
அலட்டிக் கொள்வர்!

* தோற்றவனை கண்டால்
தேவை தானா என்று
எகத்தாளம் பேசுவர்!

* உள்ளவனைக் கண்டால்
கொள்ளை அடித்த பணமென்று
குற்றம் சொல்வர்!

* இல்லாதவனைக் கண்டால்
பிழைக்க தெரியாதவனென்று
இகழ்ந்து பேசுவர்!
* தப்பு செய்தவன்
தண்டனை பெற்றால்
சட்டம் சரியில்லை என்பர்!

* தப்பு செய்யாதவன்
தண்டனை பெற்றால்
சரியான நீதி என்பர்!

* பிழைப்பு தேடி
பிற நாடு சென்றால்
பேராசை பிடித்தவன்
என்று பிதற்றுவர்!

* உழைப்பு தேடி
உள்நாட்டில் உலவினால்
ஊர் சுற்றியென்று
உதாசினம் செய்வர்!

* ஊருக்கு உதவினால்
ஊர்கழுதை என்று
பட்டம் சூட்டுவர்!

* சும்மா சுற்றினால்
சோம்பேறி என்று
முத்திரை குத்துவர்!

* மற்றவர் குறைகளை
மணிக்கணக்கில் பேசும்
இவர்களுக்கு
ஒரு நிமிஷம் கூட
கிடைப்பதில்லை
தம் குறைகளை
நினைத்துப் பார்க்க!
க.அழகர்சாமி,
கொச்சி. in http://www.dinamalar.com

Natarajan

 

காவியம் படைத்த கனவு நாயகன் கலாம் முதலாண்டு நினைவஞ்சலி….

 

1931: தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவில் அப்துல் கலாம் பிறந்தார்.

gallerye_021857771_1572606

1954: திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார்.

 

1960: சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார்.

 

1960: டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

 

1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.

 

1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் ரோகிணி செயற்கைக்கோளை,

 

‘எஸ்.எல்.வி.,- 3’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவினர். இதன் மூலம்

 

உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பினார்.

 

1980-90: ஒருங்கிணைந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின் கீழ், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

1981: பத்ம பூஷன் விருது பெற்றார்.

 

1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.

 

1992 – 99: டி.ஆர்.டி.ஓ., அமைப்பின் செயலராகவும், பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.

 

1997: நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.

 

1998: பொக்ரான் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது.

 

1999: அப்துல் கலாம் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் ‘அக்னி சிறகுகள்’

 

ஆங்கிலத்தில் வெளியானது.

1999 – 2001 : பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.

 

2002: நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 

2007: ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

 

2007: திருவனந்தபுரத்தில் இஸ்ரோவால், தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல் வேந்தராக பொறுப்பேற்றார்.

 

2007-15 : ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின், பல்வேறு பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.

 

2015: மேகாலயாவில் மறைந்தார்.

பொன்மொழிகள்

 

* கனவு காணுங்கள் அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்… நம்மால் முடியும்… இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

 

* முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில்

 

தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்.

 

* மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து, மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.

 

* அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கிறது.

 

* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

 

* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

 

* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

 

* உன் ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனெனில் கையே இல்லாதவனுக்கும் எதிர்காலம் உள்ளது.

 

* ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முக மனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்று மிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது ‘ரோல் மாடலாக’ கொண்டு செயல்பட்டார்.

கலாமுக்கு மரியாதை

 

கலாம் மறைவுக்குப் பின் பல்வேறு மாநில அரசுகளும், அவரது பெயரை சூட்டி மரியாதை அளித்துள்ளன.

 

* டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம்.

 

* ஒடிசாவில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு, அப்துல் கலாம்

 

தீவு என பெயர் மாற்றப்பட்டது.

 

* கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியுள்ளது.

 

* உத்தர பிரதேசத்தில் செயல்படும் உ.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்துள்ளது.

 

* டில்லி அரசு ‘மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக்கடன்’ திட்டத்துக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது.

 

* தமிழக அரசு அப்துல் கலாம் பிறந்த தினத்தை ‘இளைஞர் எழுச்சி தினமாக’ அறிவித்தது. மேலும் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு அவரது பெயரில் விருது ஒன்றையும் வழங்குகிறது.

 

* ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை மையத்துக்கு, அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு

 

இன்று சூட்டுகிறது.

 

* பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லுாரிக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

 

கடைசி நிமிடத்திலும்

 

கலாம் தன் கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு காரில் பயணம். மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு வீரர்கள் நின்றபடி பின்தொடர்ந்து வந்தனர்.

 

அதைப்பார்த்த கலாம், அவரை தயவு செய்து அமரச் செய்யுங்கள் என்றார். இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான் என எடுத்துச் சொல்லியும் கலாம், கேட்க வில்லை. கடைசியில் அவர், நான் அந்த பாதுகாவலரை சந்திக்க வேண்டும் என்றார்.

 

ஐ.ஐ.எம்., சென்றதும் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்த அப்துல் கலாம், ‘நன்றி இளைஞனே. என்னால் தானே உனக்கு இந்த கஷ்டம். சோர்ந்து விட்டாயா? எதாவது சாப்பிடுகிறாயா? எனக்காக

 

1 மணி நேரம் நின்று கொண்டு வந்தாயே நன்றி இளைஞனே என்றார். அந்த பாதுகாவலருக்கு பேச வார்த்தை வரவில்லை.

 

‘சார்… உங்களுக்காக நான் 1 மணி நேரம் அல்ல… 6 மணி நேரம் கூட நின்று கொண்டே வருவேன் என்று பதிலளித்தான். கலாமின் இப்படிப்பட்ட மனிதநேய செயல்களால் தான் அவர், இன்றும் மக்களால் விரும்பப்படுகிறார்.

Source……www,dinamalar.com

Natarajan